Tuesday, August 19, 2014

இந்தி: திணிப்பும் எதிர்ப்பும்


மத்திய உள்துறை அமைச்சகமும், அலுவல் மொழித்துறையும் (10-03-2014, 27-05-2014) ஆகிய நாட்களில் மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கைகள் எப்போதும் போல தமிழக அரசியலில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. “அரசு அலுவலர்கள் அதிகாரப்பூர்வமாகக் கையாளும் சமூக வலைத்தளங்களில் (டுவிட்டர், ஃபேஸ்புக், பிளாக் முதலியன) கட்டாயம் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் அல்லது ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டையும் பயன்படுத்தலாம். ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டையும் பயன்படுத்தும்போது இந்திக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்பதே சுற்றறிக்கைகளின் உள்ளடக்கம்.

மத்திய அரசு இது போன்ற உத்தரவுகளைப் பலமுறை பிறப்பித்திருக்கிறது. மத்திய அரசின் இந்திக்கு ஆதரவான பல்வேறு அரசாணைகளையும், சுற்றறிக்கைகளையும் தமிழ் ஊடகங்களும், தமிழ் மக்களும் அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருப்பதால் பெருவாரியான ஒரு சமூகம் சிறுபான்மையான ஒரு சமூகத்தின் மீது செலுத்தும் ஆதிக்கமாகவே இந்தித் திணிப்பை எதிர்கொள்கின்றது. அதனால் எதிர்ப்புகளும், போராட்டங்களும் பெருகின. இந்திக்கு எதிரான போராட்டத்தில் 1937களிலிருந்து தமிழகம் இழந்தவை கொஞ்சநஞ்சமல்ல. 1939 சனவரி 15இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் உயிர் நீத்த நடராசன் முதல் எத்தனையோ உயிர்த் தியாகங்கள்; பெரியார் போன்ற தலைவர்களும் பெருந்திரளான மாணவர்களும் அனுபவித்த சிறைவாசம் எனத் துயரங்கள் நிறைந்தது தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு.

இந்தி எதிர்ப்பு என்னும் ஒற்றை முழக்கத்தைப் பிரதானப்படுத்தித் தமிழ்நாட்டில் 1967இல் திமுக ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்குத் தமிழர்களிடத்தில் தமிழுணர்வைத் தட்டி எழுப்பியது இந்தி. சாதி, மதம் போன்ற பாகுபாடுகளைக் களைந்து தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரே சக்தி தாய்மொழி என்பதைத் தமிழக அரசியல் தலைவர்களுக்கு உணர்த்தியது இந்திதான். சுதந்திரப் போராட்டத்தில் இந்தியர்களை ஒருங்கிணைக்க காங்கிரஸுக்குப் பெரும் சவாலாக இருந்தவை இந்தியர்களின் பலதரப்பட்ட தாய்மொழிகளே. இவை திமுக போன்ற மாநிலக் கட்சிகளின் வளர்ச்சிக்கு நீர்பாய்ச்சின. அந்த விசுவாசமே இன்றளவும் தமிழக அரசியல் தலைவர்கள் இந்தியை எதிர்த்தும் தாய்மொழியை ஆதரித்தும் எழுதுகின்ற கடிதங்களுக்கும், விடுக்கின்ற அறிக்கைகளுக்கும் அடிப்படை. 1930களிலிருந்தே இந்த எதிர்ப்பை இந்தியா கண்டுகொண்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்குப் மாநிலங்களில் இருந்து வரும் எதிர்ப்பை விடத் தெற்கிலிருந்து வருவது வலிமையானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கும் என்பதை மத்திய அரசே அறியும்.

இந்திக்கு ஆதரவான மத்திய அரசின் நடவடிக்கைகளில் அரசியலைத் தவிர்த்து மொழி சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகினால் நமக்குக் கிடைக்கும் பிம்பம் முற்றிலும் புதிதானது. மேற்சொன்ன சுற்றறிக்கைகளை நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சவால் நிறைந்தது என்பதற்கு இந்தியாவில் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. தமிழக அரசும் தமிழ் வளர்ச்சித்துறையும் தமிழர்களிடம் தமிழை வளர்க்கப் பட்டபாடுகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தமிழில் கையெழுத்திடுங்கள், முன்னெழுத்தைத் தமிழில் எழுதுங்கள், பெயரைத் தமிழில் எழுதுங்கள், அரசாணைகள், அறிவிப்புகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் முதலியவற்றைத் தமிழில் அனுப்புங்கள் என்று 1956இல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டு,
(23-1-1957)இல் ஆளுநரின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்தது.

எத்தனையோ உத்தரவுகள் போடப்பட்டன. அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த முடிந்ததா? அவ்வுத்தரவுகளை இன்றைய நடைமுறையோடு பொருத்திப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று இந்திக்காரர்களிடம் கேட்கவில்லை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களிடம்தான் தமிழக அரசு வேண்டியது. அதுவே சாத்தியப்படாதபோது, இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடம் மத்திய அரசு போடும் இந்த உத்தரவுகள் சாரமற்றவை. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, குஜராத், மேற்குவங்கம், அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, பஞ்சாப், காஷ்மீர் முதலிய மாநிலங்களில் பணியாற்றும் இந்தி அறியா மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்தியைப் பயன்படுத்துவது நடைமுறையில் இயலாதது. சாத்தியப்படாத ஒன்றால் தன் அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை யாரும் விரும்புவதில்லை. எனவே, இந்தச் சுற்றறிக்கை வந்த சில நாட்களிலேயே, இந்தி பேசும் மாநிலத்தவர்களுக்கு (இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு) மட்டுமே பொருந்தும் என மோடி அரசு பின்வாங்கியது.

இன்று தமிழுக்கு எதிரி இந்தியோ, சமஸ்கிருதமோ அல்ல. அதே போன்று இந்திக்கு எதிரி தமிழோ, பிற மாநில மொழிகளோ அல்ல. இந்திய மொழிகள் அனைத்திற்குமான பொது எதிரி ஆங்கிலம். ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பெரும்பாலான நாடுகள் தம் தாய்மொழியைத் தம் மக்களிடம் தக்கவைப்பதற்கே இன்று தடுமாறிக்கொண்டிருப்பதை மத்திய அரசு நன்கு உணர்ந்திருக்கிறது. அந்த அளவிற்கு ஆங்கிலத்தின் வீச்சு வேகமாகவும் ஆழமாகவும் இருப்பதால் மத்திய அரசு இந்திக்கு ஆதரவான திட்டங்களை விரிவுபடுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்தபோதெல்லாம் பல்வேறு மொழிகள் தமிழகத்தின் ஆட்சி மொழியாகவும் செல்வாக்குப் பெற்ற மொழியாகவும் இருந்திருக்கின்றன. சோழர் ஆட்சியில் சமஸ்கிருதம்; மொகலாயர் ஆட்சியில் பாரசீகம், அரபி, உருது; நாயக்கர் ஆட்சியில் தெலுங்கு; ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம்; பிரெஞ்சுக்காரர் ஆட்சியில் (புதுச்சேரி) பிரெஞ்சு எனத் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்ற பிறமொழிகளின் வரலாறு நீளமானது. அந்தந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த மொழிகள் தமிழின் மீதும் ஆதிக்கம் செலுத்தின. இன்று பயன்பாட்டில் உள்ள பொதுத்தமிழில் சமஸ்கிருதம், பாரசீகம், அரபு, உருது, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு (புதுச்சேரித் தமிழ்) எனப் பிறமொழிச் சொற்கள் ஏராளம் கலந்திருக்கின்றன. இந்த நிலை இலங்கைத் தமிழிலோ, சிங்கப்பூர்த் தமிழிலோ, மலேசியத் தமிழிலோ, ஆப்பிரிக்கத் தமிழிலோ காணமுடியாதது.

பிற மொழியாளர்களின் ஆட்சியிலிருந்து நாம் விடுதலை பெற்றாலும், தமிழில் கலந்த பிற மொழிச்சொற்களைக்களைய முடியவில்லை. இந்த நிலை தமிழுக்கு மட்டும் நேர்ந்ததல்ல. இந்திய மொழிகள் அனைத்திற்கும் உண்டு. தமிழில் “மணிப்பிரவாளம்” என்று ஒரு புதிய நடையே உருவாகும் அளவிற்குச் சமஸ்கிருதத்தின் தாக்கம் இருந்திருந்தாலும் அதைவிடப் பலமடங்காக இன்று ஆங்கிலத்தின் தாக்கம் இருக்கின்றது. “தங்கிலிஸ்” என்று பரவலாக அழைக்கப்படும் ஆங்கிலமும் தமிழும் கலந்த நடை இன்று தமிழில் ஆழமாகக் வேரூன்றியிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட இந்த அளவிற்கு ஆங்கிலம் பரவவில்லை. தூய தமிழிலோ, தூய ஆங்கிலத்திலோ ஒரு தொடர்கூட அமைக்கத்தெரியாது இரண்டையும் கலக்கின்றனர். தமிழரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற “தங்கிலிஸ்” சோழர்காலத்தில் மணிப்பிரவாளம் பெற்ற செல்வாக்கை விட, சுதந்திரத் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்கோடு திகழ்கின்றது.

ஆங்கிலம் தம் தாய்மொழியைச் சிதைத்துவிடும் என்பதை இந்திக்காரர்கள் உணர்ந்த அளவிற்குத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. மத்திய அரசு எடுக்கும் இந்திச்சார்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியா முழுமையும் இந்தியைப் பரப்ப வேண்டும் என்னும் நோக்கமுடையவை என்றாலும் அது நடைமுறைச்சிக்கல் நிறைந்தது. இந்திய மாநிலங்கள் முழுமையும் ஆங்கிலமொழிக்கு அடிமை. உண்மையைச் சொன்னால் ஆங்கிலம் இந்தியின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. இன்று இந்தி தன் கழுத்தை விடுவிப்பதற்குத்தான் போராட வேண்டியிருக்கிறதேயொழிய பாய்ச்சலுக்குத் தயாரில்லை. கழுத்தை விடுவிக்கும் முயற்சியாகவே மத்திய அரசின் இந்திச்சார்பு நடவடிக்கைகள் இருக்கின்றன. ஆனால், செத்த பாம்பைக் கண்டு பயப்படுவதைப்போல, இந்தியைக் கண்டு தமிழக அரசியல்வாதிகள் இந்திப்புலி பாயப்போகிறது பாயப்போகிறது எனக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் ஆங்கிலப்புலி தமிழர்களின்மீது பாய்ந்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்ட தமிழர்கள் இந்தியை எதிர்த்தனர். இந்தி தமிழகத்தில் மொழியிலும், கல்வியிலும், மக்களிடத்திலும் எத்தகையை விளைவுகளை ஏற்படுத்தும் என அசரீரி கேட்டு அஞ்சியவர்கள் அத்தகைய விளைவுகளை ஆங்கிலம் இழைத்தபோது கரவோசையோடு வரவேற்றார்கள், ஊக்கப்படுத்தினார்கள். தமிழின் அழிவு அண்ணனால் வரக்கூடாது, அடுத்தவனால் வரலாம் எனக் குடும்பப் புண்ணியம் காத்த தம்பிகள் தமிழர்கள். அரசியல், பொருளாதாரம், கல்வி முதலியவற்றின் அடிப்படையில் இந்தியால் தமிழகத்திற்குப் பின்னடைவு ஏற்படும் என்பதில் நியாயம் உண்டு. ஆனால், மொழி அடிப்படையில் இன்று ஆங்கிலத்தால் தமிழ் அடைந்திருக்கும் சிதைவும் அழிவும் இந்தியால் நிகழ்த்த முடியாதது. ஆங்கிலத்தின் வீச்சைப் புரிந்து கொண்டு மத்தியில் முரணான கொள்கையுடைய கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இந்திக்காப்பில் ஒன்றிணைகின்றன.

ஆனால் தமிழகத்தின் நிலை? அய்யா தொடங்கிவைத்த தமிழ் நிறுவனம் அம்மா ஆட்சியில் உறங்கும், அம்மா கொண்டுவந்த தமிழ் அமைப்புகள், அய்யா ஆட்சியில் உறங்கும். திராவிடக் கட்சிகளின் ஆட்சி திராவிட மொழியான தமிழுக்கு ஆக்கப்பூர்வமாக என்ன செய்திருக்கின்றன?. அதிமுக ஆட்சியின் மூன்றாண்டு (2011-2014) சாதனைக்குறிப்பில் தமிழ் வளர்ச்சித்துறை ஆற்றியுள்ள பணிகளைப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். திராவிடக் கட்சிகளின் தமிழ் வளர்ச்சி, தமிழ் மேம்பாடு என்பது தமிழறிஞர்களுக்கு விருது கொடுப்பது, ஓய்வூதியம் அளிப்பது, தமிழ்த்தாய்க்குச் சிலை திறப்பது, தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவது, கொண்டாடுவது, தமிழாய்வு என்னும் பெயரில் சில நிறுவனங்களுக்கு நிதி அளிப்பது முதலியவற்றோடு நின்றுவிடுகின்றது. தமிழை வளப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் எந்தத் திட்டமும் தமிழக அரசிடம் இல்லை. இருபதாம் நூற்றாண்டில் தனிநாயகம் அடிகள் போன்ற தமிழறிஞர்கள் தொலைநோக்குப் பார்வையில் தொடங்கிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றவை ஆய்வுத் தடத்திலிருந்து ஆட்சியாளர்களின் துதிபாடிகளாக மாறிவிட்டன. தமிழறி ஞர்கள் அலங்கரித்த இருக்கைகள் கறைபடிந்த கரைவேட்டிக்காரர்களின் கைக்களுக்குள் சிக்கியுள்ளன. மத்திய அரசு இந்தியைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சியில் சிறிதளவு கூட (மத்திய அரசுக்குப் போட்டியாகக்கூட) தமிழைக் காக்கத் தமிழகத்தை ஆண்ட/ஆளுகின்ற திராவிடக் கட்சிகள் எடுக்கவில்லை என்பதற்குத் தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களே சாட்சி.

இந்தி: இந்தியாவின் ஆட்சிமொழி?

ஒரு மொழியுடைய நாடுகளைவிட இந்தியா போன்ற பன்மொழி கொண்ட நாடுகள் தனியொரு மொழியைத் தேசியமொழி, அலுவல்மொழி எனப் பிரகடனப்படுத்துவதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. மொழிகளின் தொட்டில் என மொழியியலாளர்களால் அழைக்கப்படும் இந்தியாவில் 1600க்கும் மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன. அவற்றில் 22 மொழிகள் அரசு அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாநிலங்களில் அவை அலுவல் மொழியாக இருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பொதுவான ஓர் அலுவல் மொழி இருந்தால் இந்தியாவின் வளர்ச்சி விரைவுபடும் என மத்திய அரசு நம்புகிறது. அதற்கு சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளையும், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளையும் முன்னுதாரணமாகக் காட்டுகிறது.

பொது அலுவல் மொழியாக இந்தியை நிலைநிறுத்த மத்திய அரசு தொடர்ந்து முயல்கின்றது. இந்தி பொது அலுவல் மொழியாவதில், வடமாநிலத்தில் உள்ள உருது பேசும் பெருவாரி மக்களுக்கே உடன்பாடில்லை. அதனால் சுதந்திரப் போராட்டத்தை வலுப் படுத்த, 1920களில் இந்தியும் உருதும் கலந்த இந்துஸ்தானியைக் காந்தியும் நேருவும் ஊக்குவிக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால், அதுவும் சரியான தீர்வல்ல. இந்திக்கு இருக்கும் ஆதரவைப் போன்று அதற்கான எதிர்ப்பும் அதிகம். மத்திய அரசு தொடர்ந்து இந்தியை வலியுறுத்துவதற்கான காரணம் வாக்குப் பெரும்பான்மை. அதிக வாக்காளர்களைக் கொண்ட மொழி இந்தி என்ற எண்ணத்தை மத்திய அரசு மொழிக் கொள்கையிலும் கடைப்பிடிக்கின்றது. சுதந்திரத்திற்குப் பின் 1949இல் தேசத்தில் இந்தியை எப்படியாவது பிரதானப்படுத்த வேண்டும் என்று முயல்கையில் தேசியமொழி என்ற பாதை மூடப் பட்டதால், அலுவல்மொழி என்ற புதியபாதையில் பிற மாநிலங்களுக்குள்ளும் இந்தியைக் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவெடுத்தது.

இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் ஆங்கிலத்தை உலகத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்துவதோடு, ஒட்டுமொத்த இந்தியாவின் அலுவல் மொழியாகவும் பயன்படுத்துவதையே விரும்புகின்றன. மத்திய அரசுக்கு அதில் உடன்பாடு இல்லாததால் இந்திக்கு எதிராக எழுந்த அத்தனை எதிர்ப்புகளையும் மீறி, பெரும்பான்மையான மக்கள் பேசும் இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக்கி 1963இல் அலுவல்மொழிகள் சட்டம் இயற்றியது. இந்த அலுவல் மொழிச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு இந்திக்கு ஆதரவாகவும், பிராந்திய மொழிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் அரசாணைகளையும் பிறப்பித்துக் கொண்டிருக்கிறது. அதை இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் தாய்மொழியின் கழுத்தை நெரிக்கும் செயல் என்றும் இந்தித்திணிப்பு என்றும் அவ்வப்போது எதிர்க்கின்றன.

அண்ணா முதல்வராக இருந்த போது (23-01-1968) இல் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தைத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். “தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும், பாடமொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும், நிர்வாக மொழியாகப் பல்வேறு துறைகளிலும் ஐந்தாண்டு காலத்துக்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கையை மேற்கொள்வது என்று இம்மன்றம் தீர்மானிக்கிறது”. அண்ணாவின் தமிழுக்கு ஆதரவான இந்தத் தீர்மானமும் (23-01-1968), இதற்கு முன்மாதிரியாக 1949ஆம் ஆண்டு, மத்தியில் நிலவிய தேசியமொழிப் பிரச்சினைக்கு கே.எம். முன்ஷி, கோபாலசாமி ஐயங்கார் ஆகியோரைக் கொண்டு உருவாக்கி மத்திய அரசு இந்திக்கு ஆதரவாகக் கொண்டுவந்த தீர்மானமும்- “தேசிய மொழி என்பதே வரையறுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஒன்றியத்தின் அலுவலக மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டன. தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழியாகத் தேர்வு செய்யப்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் அனைத்து அலுவலக நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும் (உட்பிரிவு 343). ஐந்து ஆண்டுகள் கழித்து இந்தியை வளர்க்கவும் ஆங்கிலத்தைப் படிப்படியாக விலக்கவும் வழிவகை காண ஒரு மொழி ஆணையம் ஏற்படுத்தப்படும்” (உட்பிரிவு 344) - அடிப்படையில், அடிமை மனநிலையில் ஆதிக்க மொழியை எதிர்ப்பது மட்டுமல்ல, மொழிப் பரவலாக்கத்தையும் முக்கியமாகக் கருதின. மத்திய அரசின் சமூக வலைத்தளத்தில் பயன்பாட்டு மொழி சார்ந்த தற்போதைய சுற்றறிக்கையும் அவ்வகையதே.

பிற மொழியால் தம் தாய் மொழி அழிந்துவிடக்கூடாது என்னும் பேரச்சத்தாலும், மொழிப்பரவலாக்க முயற்சியாகவும் பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் பல்வேறு தீர்மானங்களும், சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. அவற்றை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்திய முறையைப் பார்த்தோமானால் மத்திய அரசு இந்தி மொழிச் செயலாக்கத்தில் உறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெற்றிருப்பதற்கும், மாநிலங்களின் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதற்கும் பின்வரும் களங்கள் தக்கச் சான்றுகளாக அமைகின்றன.

களம் - 1

மத்திய அரசு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கியிருக்கும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இந்தித்துறை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற வெளிநாட்டு மொழிகளுக்குக் கிடைத்த இடம்கூடப் பிற இந்திய மொழிகளுக்கு இல்லை. அந்தந்தப் பிராந்தியங்களில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் மட்டுமே அந்தந்தப் மாநில மொழிகளுக்கு இடம் அளித்துள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்தித்துறையை வைப்பதன் அடிப்படை நோக்கம் இந்திமொழி கற்றோருக்கு வேலைவாய்ப்பைப் பெருக்குதல்.
மத்தியப் பல்கலைக்கழகங்களின் இணைய தளம் ஆங்கிலத்தில் மட்டுமன்றி இந்தியிலும் உண்டு. மாநில மொழிகளில் கிடையாது. தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர் திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழக இணையத்தளத்தில் ஆங்கிலம் அல்லது இந்தி மூலம் தான் தகவல்களைத் தேட முடியும். தமிழுக்கு அங்கே இடமில்லை. இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத, இந்தி பேசும் மாநிலத்தைச் சாராத இந்தியர் அனைவரது நிலையும் இதுதான். ஆனால், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் உள்ள அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்களிலும் தனக்குத் தேவையான தகவல்களைத் தன் தாய்மொழியான இந்தியிலேயே பெறமுடியும். இந்த நிலை மத்தியப்பல்கலைக் கழகங்களில் மட்டுமல்லை, ஹிநிசி, ழிசிணிஸிஜி, ழிஙிஜி, சாகித்ய அகாடமி போன்ற கல்வி, மருத்துவம், சுகாதாரம் முதலிய துறை சார்ந்த மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் தொடர்கிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்தின் பெயரும் இந்தியில்தான் முதலில் இருக்கின்றன. ஆங்கிலம் அடுத்தபடிதான். இந்நிறுவனங்கள் வெளியிடும் அறிவிப்புகள், அறிக்கைகள், விண்ணப்பங்கள் முதலிய அனைத்தும் ஆங்கிலத்தோடு இந்தியிலும் உண்டு. வேறொரு இந்திய மொழியில் கிடையாது.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அரசு, தனியார் நிறுவனங்களின் இணையத்தளங்கள் தமிழிலும் இருக்கின்றனவா? தமிழ் பல்கலைக்கழகத்தைத் தவிர, தமிழ் நாட்டின் தாய்ப்பல்கலைக்கழகமான சென்னைப்பல்கலைக்கழகம் உள்பட எந்தப் பல்கலை இணையத்தளத்திலும் தமிழ் இல்லை. விண்ணப்பங்களும், அறிவிப்புகளும் தமிழில் இல்லை. ஆனால், பனராஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற வட இந்திய மாநிலப் பல்கலைக்கழகங்கள் தன் இணையத்தளத்தை இந்தியிலும் வைத்திருக்கின்றன.

களம் - 2

தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் கலைக் கல்லூரிகளில் தமிழ்த்துறையே கிடையாது. மருத்துவம், பொறியியல் போன்ற பாடங்களை யாரும் தமிழில் பயிற்றுவிக்கவில்லை. தனியார் கல்லூரிகள் பிறதுறை ஆசிரியருக்குக் கொடுக்கும் ஊதியத்தைவிடத் தமிழாசிரியருக்குத் சொற்பச் சம்பளமே கொடுக்கின்றன. தமிழராய்ப் பிறந்த எவரும் தமிழைச் சொல்லிக் கொடுக்கலாம் என்ற நிலை நம் கல்வி நிறுவனங்களில் சாதாரணம். தமிழ் எளிதானது, தமிழில் ஒன்றுமில்லை என்பது தமிழ் கற்பித்தல் பற்றிய தமிழர்களின் பொதுப்புத்தி. தாய்மொழியில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம்.

களம் - 3

மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களான இரயில்வே, தபால், வங்கி முதலிய பல்வேறு நிறுவனங்களில் அலுவல் மொழியாக இந்தி இந்தியா முழுமையும் பரவியிருக்கிறது. வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் ஓர் இந்திக்காரருக்கு வாரங்கல், சென்னை, நாகர்கோவில் என எந்த இரயில்வே சந்திப்பாக இருந்தாலும் அங்கே வந்து செல்லும் இரயில்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் அவரது தாய்மொழியான இந்தியிலேயே எழுத்து வடிவிலும், ஒலி வடிவிலும் கிடைக்கிறது. ஆனால் தலைநகர் தில்லிக்குச் செல்லும் ஒரு தமிழருக்குத் தில்லி இரயில்வே சந்திப்பிற்கு வந்து செல்லும் இரயில்கள் பற்றிய தகவல்கள் அங்கே தமிழில் கிடைக்கிறதா? இருவரும் இந்தியர்கள்தான்.

களம் - 4

மத்திய அரசின் வேலைவாய்ப்புச் செய்திகள் ணினீஜீறீஷீஹ்னீமீஸீt ழிமீஷ்s (வார இதழ்) இந்தி, உருது, ஆங்கிலம் மூன்றில் மட்டுமே வருகின்றது. பிற பிராந்திய மொழிகளில் இல்லை.

களம் - 5

தமிழ் நாட்டில் இருக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வங்கிகள், தொழில் நிறுவனங்கள் போன்ற பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர் பணி இருக்கிறது. அவை இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மத்திய அரசின் பல்வேறு போட்டித்தேர்வுகள் அனைத்தும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருப்பது நாடறிந்தது.

மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியை அலுவல் மொழி என்ற பெயரில் ஆட்சி மொழியாக்குவதேயாகும். மேற்கண்ட களங்களில் இந்தி பெற்றுள்ள இடம் ஐரோப்பிய நாடுகளில் ஆட்சிமொழிகள் பெற்றுள்ள இடத்திற்குச் சமமானது. மத்திய அரசு இந்தியைத் தவிர பிற இந்திய மொழிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது ஊரறிந்த ரகசியம். சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் ஒதுக்கும் நிதியில் 10 சதவீதம்கூட பிற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கியதில்லை.
ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தாலும் ஒட்டுமொத்த இந்திய மொழிகளைப் பற்றிய புரிதலும், அக்கறையும் கொண்டவர்களாக ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். மாக்ஸ் முல்லர், எல்லீஸ், ராபர்ட் கால்டுவெல் போன்ற மிஷனரிகள் 18-19ஆம் நூற்றாண்டுகளிலேயே இந்திய மொழிகளின் மீதிருந்த தனிப்பட்ட ஆர்வத்தால் அவற்றை ஆராய்ந்து இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களையும் அவற்றின் இயல்புகளையும் வேறுபாடுகளையும் உலகிற்கு உணர்த்தினர். இந்திய மொழிகள் பற்றிய அவர்களுக்கு இருந்த அறிவிலும் அக்கறையிலும் ஒரு சதவீதம்கூட இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், தமிழகத்தில் 2014 ஜூனில் எழுந்த இந்தி எதிர்ப்பிற்கு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆற்றிய எதிர்வினை. இந்தி என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளம், அஸ்ஸாமி, உருது முதலிய பிராந்திய மொழிகளின் கலவைதான் என்கிறார் அவர். என்னவொரு அறியாமை.

ஆனாலும் மத்திய அரசு இந்தியர் அனைவருக்குமான பொது மொழியைக் கட்டமைப்பதில் தொடர்ந்து தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றது. அதற்குக் காரணம் பொதுமொழிக் கொள்கையில் அது கடைப்பிடிக்கும் ஒரு தலைபட்சமும் இந்திய மொழிகள் பற்றிய அறியாமையும். மொழிகளின் தோட்டமாக விளங்கும் இந்தியாவில் தனியொருமொழியை தேசியமொழி எனப் பிரகடனப்படுத்த முடியாது என்னும் யதார்த்த உண்மையை இந்திய அரசு 1949இல் தான் உணர்ந்தது. அதே போன்று 22 மாநில மொழிகள் வழங்கும் நாட்டிற்கு அலுவல் மொழியென்று தனியொரு மொழியைத் தீர்மானித்திருப்பது பிற பிராந்தியங்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மறுப்பதன் அடையாளம். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள பல வளர்ந்த நாடுகள் ரயில் பயணச்சீட்டில்கூட ஐந்து முதல் ஆறு மொழிகளில் தகவல் அளிக்கின்றன. அங்கு அரசு நிறுவனங்களின் இணையத்தளங்களைத் தன் நாட்டு மக்களிடம் புழங்கும் பல்வேறு மொழிகளில் கட்டமைக்கின்றன. இந்திய மாநிலங்களில் தாய்மொழி கோஷத்தால் வளர்ந்த அரசியல் தலைவர்கள் தம் மொழியை வளர்ப்பதில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மாநில மொழிகள் அனைத்தையும் அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநிலக் கட்சிகளுக்கு உண்டு. இந்தியாவின் பலதரப்பட்ட தாய்மொழிகளின் உரிமைகளை நிலைநாட்ட இன்றைய நவீனத் தொழில் நுட்பம் தயாராகவே இருக்கிறது.

த. சுந்தரராஜ்

No comments:

Post a Comment