Wednesday, July 30, 2014

மரபணு மாற்று பயிர் ஆய்வுக்கு அஞ்சும் அமெரிக்கா, ஐரோப்பா: ஆபத்தை உணராமல் அவசரம் காட்டும் இந்தியா

மரபணு மாற்று பயிர்களுக்கு வயல்வெளி ஆய்வு நடத்துவதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், 'அடக்கி' வாசிக்கும் நிலையில், இந்தியாவில் அதற்கு அவசரம் காட்டுவது ஏன்?' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, தமிழக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:கடந்த ஆண்டு, மே மாதம், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையில், மரபணு மாற்று கோதுமை கலந்திருப்பது கண்டறியப்பட்டு, அதை, ஜப்பான் திருப்பி அனுப்பியது. அமெரிக்காவில் இருந்து அதிகளவில், கோதுமை இறக்குமதி செய்யும் ஜப்பான், அதற்கான தன் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.அமெரிக்க கோதுமையை அதிகளவில் இறக்குமதி செய்யும், சீனா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா நாடுகளும், இதனால், கடும் அதிர்ச்சி அடைந்தன.அமெரிக்காவின், ஓரிகான் மாகாணத்தில் உள்ள, 'மான்சான்டோ' நிறுவன மரபணு மாற்று பரிசோதனை நிலத்தில் இருந்து வெளியேறி, மற்ற விவசாயிகள் விளைவித்த கோதுமையில், இக்கலப்படம் நடந்தது கண்டறியப்பட்டது.

ஐரோப்பிய துறைமுகங்களுக்கு, மரபணு மாற்று உணவு பொருட்கள் வருகிறதா என்பதை கண்காணிக்கவும், அந்நாடுகள் உத்தரவிட்டன. அமெரிக்காவில் இருந்து வரும் கோதுமை, தீவிர ஆய்விற்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படும் எனவும், ஐரோப்பிய நாடுகள் தெரிவித்தன. 'கலப்படம் கண்டறியப்பட்டால், கப்பல் அப்படியே திருப்பி அனுப்பப்படும்' எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.இதனால், அமெரிக்காவிற்கு அன்னிய செலாவணி இழப்பும், விவசாயிகள், ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டமும் ஏற்பட்டது. இதேபோல, 2006ல், 'பேயர்' என்ற நிறுவனம் மரபணு மாற்று நெல்லை பயன்படுத்தி, வயல்வெளி ஆய்வுக்கு உட்படுத்தியது. அதுவும், மற்ற நிலங்களுக்கு பரவி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதில் கலப்படம் உள்ளது, ஜப்பானில் கண்டறியப்பட்டது.

இதனால், அமெரிக்க நெல் இறக்குமதிக்கு, பல நாடுகள் தடை விதித்ததால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண விவசாயிகளுக்கு, பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அமெரிக்க விவசாயிகள், 'பேயர்' நிறுவனம் மீது, வழக்கு தொடர்ந்தனர். 75 கோடி டாலர்களை நஷ்ட ஈடாக வழங்கி, இந்த வழக்கை கோர்ட்டிற்கு வெளியே, 'பேயர்' நிறுவனம் முடித்துக் கொண்டது.மரபணு மாற்று பயிர்களில் நடந்த கலப்படம் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பாடத்தை கற்று தந்துள்ளது. இது ஒருபுறம் நடக்க, 2011 டிசம்பரில், மத்திய அரசின் மரபணு மாற்று தொழிற்நுட்ப அனுமதிக் குழு, 'மான்சான்டோ-' நிறுவனம் தயாரித்த மரபணு மாற்று கோதுமைக்கு வயல்வெளி ஆய்வு நடத்த அனுமதி அளித்தது.

ஆனால், மகாராஷ்டிர மாநில அரசு அதற்கு இதுவரை அனுமதி சான்றிதழ் வழங்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம், தன் மற்றொரு மரபணு மாற்று கோதுமையை, வயல்வெளி ஆய்வு செய்யவும், அந்நிறுவனம் அனுமதி கேட்டது.ஆட்சி மாறிய நிலையில், தற்போது மத்திய அரசின் மரபணு மாற்று தொழிற்நுட்ப அனுமதிக் குழு, வயல்வெளி ஆய்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.சோதனைகளையும், கட்டுபாடுகளையும் முறையாக வைத்துள்ள அமெரிக்காவிலேயே, மரபணு மாற்று கலப்படம் நடந்தது, அந்நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது.ஐரோப்பிய நாடுகளில், மக்களின் எதிர்ப்பு காரணமாக, மரபணு மாற்றுப்பயிர் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடங்களை, மரபணு மாற்று விதைகளை உருவாக்கும் நிறுவனங்கள், மூடிவிட்டன.

ஆனால், அதிநவீன தொழிற்நுட்பமும் இல்லாமல், சாதாரண முறையில், விவசாயம் நடக்கும் இந்தியாவில், மரபணு மாற்று பயிர்களை வயல்வெளி ஆய்வுசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, நல்ல முடிவாக தெரியவில்லை. இவ்விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு, மரபணு மாற்று வயல்வெளி ஆய்வுக்கு தடை விதிப்பார் என, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நம்புகின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தன் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மரபணு மாற்று பயிர்களுக்கான வயல்வெளி பரிசோதனைக்கு நிச்சயம் அனுமதிக்கமாட்டார் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment