Tuesday, October 14, 2014

உலக உணவு தினம் (அக். 16) : உன்னத உயிர் உணவு எது ?

இன்று மனிதனின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டது; தேவைகள் அதிகரித்து விட்டன. இயந்திர உலகத்தில் சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்டோம். இதன் விளைவாக நோய்களின் பெருக்கம் அளவுக்கு மீறி நம்மை ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டன. நோயின்றி வாழ முடியுமா? இதற்கு ஒரே பதில்... 'உணவே மருந்து... மருந்தே உணவு' என்ற இயற்கை தத்துவத்தின் அடிப்படையில் மருந்தில்லா வாழ்க்கை வாழ்வது தான்.

நோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணம்... : மேலைநாட்டு உணவுகளும், துரித உணவுகளும் நம் நாட்டில் நுழைந்தபின், பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டது தான். ''அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது'' என்றார் அவ்வையார். நம் சான்றோர்கள் உடல்நலம் பேணுதலின் அவசியத்தையும், வழிமுறைகளையும் வகுத்து நமக்கு அளித்துள்ளனர். ஆரோக்கிய வாழ்விற்கு சமச்சீர் உணவு தேவை. நமது முக்கிய உணவாக அரிசி வந்தபின்... மானிட வாழ்க்கையில் 'அரிசி அரிசி... உணவில் முக்கியமானது அரிசி' என்று மாறி விட்டோம். அதுவே உடல்நலத்திற்கு ஊறுவிளைவிப்பதாய் மாறிவிட்டது.

உடல்பருமன் ஏன்? : மண்பானையில் சிறு, குறுந்தானிய கஞ்சி, களி, கூழ், கீரை மசியல் சமைத்து சாப்பிட்ட காலம் மாறி, பீட்சா, பர்கரின் பின்னே சென்றதன் விளைவு... இளம் வயதில் உடல்பருமன். காலையில் மோரில் ஊறவைத்த கம்பு, கேழ்வரகு கூழ், மதியம் கஞ்சி, களி, இரவில் ரொட்டி, கீரை மசியல், பருப்பு துவையல்... என, நம் முன்னோர்கள் மூன்றுவேளையும் சத்தான உணவுகளை சமச்சீராக உண்டனர். அதனால் தான் உடல் திடகாத்திரமாய் வயல்வேலைகளை களைப்பின்றி செய்ய முடிந்தது. உடல் எடை கூட்டாத இந்த உணவை சாப்பிட்டதால் வயிற்றில் சதையின்றி உடலும் உறுதியாக 'மிஸ்டர் ஆணழகர்களாக' ஆண்கள் வலம் வந்தனர். ஒல்லிக்குச்சி இடையழகிகளாக நம்மூரு பெண்களும் சுழன்றனர். இப்போது சுழல்வதற்கு இடுப்பைக் காணவில்லை. ஏனென்றால் உடலோடு இடுப்பும் ஒன்றாகிப் போனது தான். அரிசியில் கார்போஹைட்ரேட் தான் மிகுந்துள்ளது. இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் எடை கூடுகிறது. எடை கூடினாலே நீரிழிவு நோய் ஆரம்பிக்கும். இது போதாதென்று துணைக்கு பத்து நோய்களையும் விருந்தினர்களாக அழைத்து வரும்.

ஆண்டுகளாக வந்த அரிசிப் பழக்கத்திற்கு மாற்றாக கோதுமையும் வந்தது. இதிலும் பிரச்னை தீரவில்லை. நார்ச்சத்து வீணாகிறது கோதுமையை உடைக்கும் போது அதிலுள்ள தவிடு எனப்படும் நார்ச்சத்து வீணாகிறது. முழு கோதுமையை அப்படியே உடைத்து மாவாக்கினால் மாவின் நிறம் சற்றே செம்மையாக இருக்கும். இதில்தான் நார்ச்சத்து உள்ளது. ஆனால் நிறம் பிடிக்கவில்லை என்று சுத்திகரிப்பதால் கோதுமையையும் சிறந்த மாற்று உணவாக பார்க்க முடியவில்லை.

கம்பு, தினை, கேழ்வரகு தானியங்களில் இந்நிலை இல்லை. அறுவடை செய்யும் போது தானியங்களை அரவைக்கு கொடுக்கும் போது மேலே உள்ள உமியை மட்டுமே நீக்கமுடியும். தானியத்துடன் தவிடு இணைந்துள்ளதால் தனியாக பிரிக்க முடியாது. எனவே இவற்றை மாவாக்கினாலும், அப்படியே சமைத்தாலும் சத்துக்கள் இடம்பெயராது. எனவே, நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது.

அரிசிக்கு மாற்று : சிறு, குறுந்தானியங்களான கேழ்வரகு, கம்பு, தினை, வரகு, சாமை, குதிரைவாலியில் அதிக நார்ச்சத்தும், குறைந்த வெப்பக்கூறுகளும் கொண்டது. அரிசிக்கு மாற்றாக ?? சதவீத அளவுக்கு குறுந்தானியங்களை சேர்த்தால் உடலுக்கு நல்லது.

அசைவ உணவுகளின் மூலமே பெரும்பாலான புரதச்சத்துக்களை பெறுகின்றனர். சைவ உணவிலும் அதிக புரதச்சத்துக்கள் உள்ளன. பயறு வகைகளை சமைத்து உண்பதை விட, அவற்றை ஊறவைத்து முளைகட்டிய தானியமாக பச்சையாக சாப்பிட்டால், அசைவத்திற்கு
இணையான அதிக புரதச்சத்துக்களை குறைந்த செலவில் பெறலாம். கீரை, காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பயறு வகைகள் மட்டுமல்ல... கம்பு, கேழ்வரகையும் முளைகட்டி பச்சையாக சாப்பிடலாம். நம் பாரம்பரிய அறிவையும், உணவையும் மீட்டெடுத்து உபயோகிக்க ஆரம்பித்தால்... பின்னால் வரக்கூடிய பலவித நோய்களின் பிடியிலிருந்து நம் சமுதாயத்தைக் காக்கலாம். இயற்கை உணவே இனியஉணவு; இதுவே உன்னதமான உயிர் உணவு. உடல்நலத்தைப் பாதிக்கும் உணவுகளை கைவிட்டு உன்னதமான நன்மை பயக்கும் உணவுகளைத் தேடி, நாம் வந்த வழியிலேயே திரும்பிச் செல்வோம். இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவோம்.

-சி.பார்வதி, விரிவாக்கத்துறை தலைவர், மனையியல் கல்லூரி,
விவசாயக் கல்லூரி வளாகம், மதுரை, 94422 19710.

No comments:

Post a Comment