Monday, November 24, 2014

சிறுநீர் பரிசோதனை

“சிறுநீர் என்பது உடலிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்தானே என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது. அது நம் உடல்நலனைக் காட்டும் மருத்துவ அறிக்கை. உடலில் இருக்கும் நோய்களையும் எதிர்காலத்தில் வர இருக்கும் நோய்களையும் முன்னரே உணர்த்தும் எச்சரிக்கை மணி’’ என்று சிறுநீர் பற்றி அறிமுகம் கொடுக்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவரான சௌந்தர்ராஜன். சிறுநீர் பற்றியும் அதன் பரிசோதனைகள் பற்றியும் நம்மிடம் அவர் விளக்கியதிலிருந்து...

மூன்று அடையாளங்கள்

மருத்துவத்தில் இருக்கும் மற்ற பரிசோதனை களைவிட மிகவும் எளிமையானது சிறுநீர் பரிசோதனை. குறைந்தபட்சம் 40 ரூபாயில் செய்துவிட முடியும். சோதனை முடிவுகளையும் உடனே சொல்லிவிடுவார்கள். வெளியேறும் அளவு, நிறம், மணம் ஆகிய மூன்றின் மூலம் உடலின் ஆரோக்கியத்தை எளிதில் எடுத்துச் சொல்லிவிடும் ஆற்றல் கொண்டது சிறுநீர்.

ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை சிறுநீர் வெளியேற வேண்டும். இதில் 400 மி.லி.க்குக் குறைந்தாலோ, 2,500 மி.லி.க்கு அதிகமானாலோ, நோயின் வெளிப்பாடாகவே இருக்கும். பிறந்த குழந்தைக்கு இந்த சிறுநீரின் அளவு 200 மி.லி.யில் ஆரம்பிக்கும். இதுதான் பெரியவர்களானதும் ஒன்றரை லிட்டராக மாறுகிறது. பிறந்த குழந்தை 24 மணிநேரத்துக்குள் சிறுநீர் கழிக்காவிட்டாலும் பிறவிக் கோளாறுகள் இருக்க வாய்ப்பு உண்டு.

சிறுநீரின் நிறம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது நியதி. நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி மஞ்சள் நிறமாக வெளியேறுவது இயல்பானதுதான். ஆனால், தொடர்ந்து மஞ்சள் நிறமாகவே வெளியேறினால், அது மஞ்சள் காமாலையின் அறிகுறி. காச நோய்க்கான மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு காவி நிறத்தில் வெளியேறும். பால் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது யானைக்கால் நோயின் அடையாளமாக இருக்கலாம். சிறுநீரகத்தில் தொற்று இருப்பவர்களுக்கு சுண்ணாம்பு நீர் போல வெளியேறும். மரபியல்ரீதியான குறைபாடுகள் இருப்பவர்களின் சிறுநீரை வெயிலில் வைத்தால் பழுப்பு நிறமாகிவிடும். சிறுநீர் துர்நாற்றத்துடன் இருப்பது நீரிழிவு, சிறுநீரகத்தில் நோய்த்தொற்று போன்ற குறைபாடுகளின் அடையாளமே. சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வெளியேறு வது ஆபத்தானது என்பதை விளக்க வேண்டியதில்லை.
இவர்கள் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். தண்ணீர் சேகரிக்கும் சிறுநீரகங்கள்சிறுநீர் தயாரிப்பதுதான் சிறுநீரகங்களின் முக்கிய வேலை என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில், உடலுக்குத் தேவையான தண்ணீரை சேகரித்து வைப்பதும் சிறுநீரகங்கள்தான். நம் உடலில் ஓடும் 5 லிட்டர் ரத்தத்தையும் சுத்திகரித்துக் கொண்டே இருக்கின்றன சிறுநீரகங்கள். ரத்தத்தில் கலக்கும் தண்ணீர் உள்பட பல உணவுகளை தேவையான சத்துகள், தேவையற்ற கழிவுப் பொருட்கள் என இரண்டாகப் பிரிக்கின்றன. இதை ஆரம்பகால சிறுநீர் என்கிறோம். இப்படி ரத்தத்தில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் 125 மி.லி. கழிவுப் பொருட்கள் வீதம், நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் சிறுநீர் பிரிக்கப்படுகிறது.

இதில் 95 சதவிகித நீரை உடலின் நீர் தேவைக்காக சிறுநீரகங்களே மீண்டும் எடுத்துக் கொள்ளும். மீதி இருக்கும் சிறுநீரே வெளியேறுகிறது. தண்ணீரோடு நம் உடலில் இருக்கும் யூரியா, கிரியாட்டினின் போன்ற புரதக் கழிவுகளை வெளியேற்றுவதும் சிறுநீர்தான். மருத்துவ அறிக்கை சிறுநீர் பரிசோதனையில் முக்கியமானது அல்புமின் பரிசோதனை. இந்தப் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் உடலின் புரதம் வெளியேறுகிறது என்று அர்த்தம்.

இது சிறுநீரகப் பாதிப்பின் ஆரம்பம். சிறுநீரில் சர்க்கரை இருந்தால், அது நீரிழிவு என்பது பலருக்கும் தெரியும். சிறுநீரகத்தில் படியும் பொருட்களை வைத்து கிருமிகள் இருக்கிறதா, சிறுநீரக அழற்சிகள் இருக்கின்றனவா, நோய்த் தொற்றுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.  இதன்மூலம் சிறுநீரகங்கள் செயலிழக்கும் வாய்ப்பு இருப்பதையும் சிறுநீரகத்தில் கல் உருவாக இருப்பதையும் கண்டுபிடித்துவிட முடியும். சிறுநீர் பரிசோதனை எளிமையானது என்பதால், பெரிய மருத்துவமனைகளில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. சாதாரண பரிசோதனை நிலையங்களிலேயே செய்து கொள்ளலாம்.

எல்லோரும் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா?

சிறுநீர் பரிசோதனையை எல்லோரும் செய்துகொள்ள வேண்டும் என்பதில்லை. குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரகப் பாதிப்புகள், ரத்த அழுத்தம், நீரிழிவு இருந்தால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கை, கால்கள், முகம் போன்றவற்றில் வீக்கம் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சிறுநீர் போகும்போது எரிச்சல் இருந்தாலோ, நிறம் மாறினாலோ, அளவுகள் கூடினாலோ, குறைந்தாலோ பரிசோதனை அவசியம். சிறுவயதில் சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்தக் காரணங்களோடு, 35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஒவ்வொரு வருடமும் இந்த முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும்போது சிறுநீர் பரிசோதனையும் அடங்கிவிடும். கர்ப்பிணிகள் சிறுநீர் பரிசோதனை செய்து கொள்வது தாய், சேய் இருவருக்கும் நல்லது. நோய்க் குறைபாடுகள் இருப்பவர்கள் மட்டும் மாதம் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

உடல் சொல்வதைக் கேளுங்கள்

நம் உடலில் ‘பயாலஜிகல் கிளாக்’ என்ற உயிர்க்கடிகாரம் செயல்படுகிறது. அந்தக் கடிகாரம்தான் நம் உடல் தேவைகளை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. எனக்கு உணவு வேண்டும், தூக்கம் வேண்டும் என்று கேட்பது அந்த கடிகாரம்தான். இதேபோலத்தான் தனக்குத் தண்ணீர் தேவை என்றாலும் தாகத்தின் மூலம் உடல் அதை உணர்த்தும். அந்த தாகம் தீரும் அளவுக்குத் தண்ணீர் குடிப்பதே போதுமானது. குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள், கை, கால்கள் வீக்கம் உள்ளவர்கள் தண்ணீர் அதிகம் குடிக்கக் கூடாது.

மற்றவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடித்தாலே போதுமானது. ஏற்கெனவே நாம் சாப்பிடும் சாதம், காய்கறிகள், பழங்கள், தேநீர், பழரசங்கள், சாம்பார், ரசம், தயிர் என்ற எல்லா உணவுப் பொருட்களிலும் தண்ணீர் கலந்திருப்பதை மறக்க வேண்டாம். இதில் சின்ன விதிவிலக்கு, சிறுநீரகக் கல் இருப்பவர்கள், சிறுநீரகத் தொற்று இருப்பவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதில் தவறில்லை.

சிறுநீரகத் தொற்று

சிறுநீரகத் தொற்று (Urinary infection) நம் ஊரில் பரவலாக எல்லோரிடமும் காணப்படும் ஒரு பிரச்னை. சுகாதாரக் குறைவால் சிறுநீரகப் பாதையில் நுண்கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதையே சிறுநீரகத் தொற்று என்கிறோம். சுகாதாரமான கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். என்றாலும், தனிமனித சுகாதாரம் காரணமாகவே சிறுநீரகத் தொற்று அதிக அளவில் ஏற்படுகிறது. இது ஆண்களைவிட பெண்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம். மலத்துவாரமும் சிறுநீர்ப் பாதையும் அருகருகில் இருப்பதால் பெண்களுக்கு இந்த நோய்த்தொற்று அதிகமாகிறது. மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத காரணத்தாலும் ஏற்படுகிறது (மாதவிலக்கு நின்ற பெண்களுக்கும் ஏற்பட லாம்).

வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் போதுமான கழிவறை வசதிகள் இல்லாதபோது சிறுநீரை அடக்கி வைத்திருப்பதும் காரணமாகிவிடுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்று குழந்தையையும் பாதிக்கும் என்பதால் அலட்சியம் காட்டக் கூடாது. குழந்தைகளுக்கு சிறுநீரகத் தொற்று அதிகமாக இருந்தால் பிறவிக் குறைபாடு கள் ஏதேனும் இருக்க வாய்ப்பு அதிகம். இது பெண்களின் நோயாக இருந்தாலும், ஆண்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் ஆபத்து அதிகம். அதனால், சுத்தம் பேண வேண்டும், சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது என்ற காரணங்கள் ஆண்களுக்கும் பொருந்தும். நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட வர்களுக்கு Silent urinary infection என்று அழைக்கப்படும் அளவுக்கு, அறிகுறியே இல்லாமல் இந்தத் தொற்று ஏற்படும். இது சிறுநீர் பரிசோதனை செய்யும்போதுதான் தெரியும் என்பதால் கவனம் தேவை.

தம்பதியர் கவனத்துக்கு...

சிறுநீரகத் தொற்று பாலியல் காரணங்களாலும் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு ‘ஹனிமூன் சிஸ்டைட்டிஸ்’ என்று பெயர். உறவுக்குப் பின்னர் ஆண், பெண் இருவருமே தங்களை சுத்தம் செய்து கொள்வது அவசியம். தம்பதியில் ஒருவருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் மற்றவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறுநீரகச் செயலிழப்புக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் இந்த சிறுநீரகத் தொற்றும் முக்கியக் காரணம் என்பதால் அலட்சியம் கூடாது. சிறுநீர்ப் பாதையில் எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீருடன் ரத்தம் வருவது, அடிவயிற்றில் வலி, காய்ச்சல், சிறுநீர் நிறம் மாறுவது போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் எச்சரிக்கையாகி விடுங்கள். 

சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரகங்கள் செயலிழப்பதில் தற்காலிகச் செயலிழப்பு, நிரந்தரச் செயலிழப்பு என்று இரு வகைகள் இருக்கின்றன. தற்காலிகச் செயலிழப்பு வருகிறவர்களுக்கு உடனடியாக சிறுநீர் நின்றுவிடும். இதற்கு ‘கிட்னி ஷட்டவுன்’ என்று பெயர். வயிற்றுப்போக்கு, வாந்தி, பாம்பு கடித்தவர்கள், மருந்து அலர்ஜி போன்ற காரணங்களால் திடீரென சிறுநீர் நின்றுவிடும். சிகிச்சைக்குப் பின்னர் சரியாகிவிடும். நிரந்தரச் செயலிழப்பு ஏற்படுவதாக இருந்தால், அதன் அறிகுறியாக அதிகமான சிறுநீர் வெளியேறும். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த நிரந்தரச் செயலிழப்பு ஏற்படும். சிறுநீர் அதிகமாக வெளியேறுவதால் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமில்லை. வயதானவர்களுக்கும் நீரிழிவு உள்ளவர் களுக்கும் சிறுநீர் அடிக்கடி வருவது சாதாரணமானதுதான்.

சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா?

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது சிறுநீர் பரிசோதனை. நீரிழிவு நோயை சிறுநீர் பரிசோதனையின் மூலமே முதன்முதலில் கண்டுபிடித்தார்கள்.
i) சிறுநீர் பரிசோதனை செய்யும்போதுதான் சிறுநீரை சேகரிக்க வேண்டும். அதற்கு முன்னரே சேகரிக்கக் கூடாது. சிறுநீர் சேகரிக்கும் முன்னர் ஓடும் தண்ணீரில் உறுப்புகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சோப், டிஸ்இன்ஃபெக்டன்ட் போன்றவற்றால் சுத்தம் செய்யக் கூடாது. இதனால், சோதனை முடிவுகள் தவறாகக்கூடும். பெண்கள் மாதவிலக்கு நாட்களில் பரிசோதனை செய்யக் கூடாது.
ii) பரிசோதனைக்காக இரண்டு குப்பிகள் கொடுப்பார்கள். ஒன்று சாதாரண பரிசோதனைக்காக... மற்றொன்று நோய்த்தொற்றைக் கண்டுபிடிப்பதற்காக. கர்ப்பமடைந்திருப்பதை சாதாரண பரிசோதனையிலேயே கண்டுபிடித்துவிடலாம்.
iii) நோய்த் தொற்றைக் கண்டுபிடிக்க சிறுநீரை பரிசோதனைக் கூடத்தில் வைத்து பாக்டீரியா, வைரஸ் போன்ற செல்கள் வளர்கின்றனவா என்று பார்ப்பார்கள். சாதாரண பரிசோதனைக்கு முதலில் வரும் சிறுநீரையும் இரண்டாவது பரிசோதனைக்கு நடுவில் வரும் சிறுநீரையும் சேகரிக்க வேண்டும். மிகவும் சுத்தமாக, கைகள், பஞ்சு போன்றவை படாமல் கவனமாக சேகரிக்க வேண்டும். இதற்கு ஆரம்பத்தில் வருவதையோ, கடைசியில் வருவதையோ  சேகரிக்கக் கூடாது.
iv) சிறுநீரை குப்பி நிறைய பிடிக்க வேண்டிய தில்லை. பாதிக் குப்பி போதுமானது. காலை வேளையில் சிறுநீர் பரிசோதனை செய்வதே நல்லது. இதில்தான் நிறைய தகவல்கள் கிடைக்கும்.
v) வயிற்றுக்குள் கரு வளரத் தொடங்கிவிட்ட பிறகு பெண்ணின் உடலுக்குள் நடைபெறும் ஹார்மோன் மாற்றங்கள் சிறுநீரில் பிரதிபலிக்கும். கர்ப்பமடைந்திருப்பதை இதன் மூலமே உறுதிப்படுத்துகிறார்கள்.
vi) சிறுநீர் பரிசோதனையின் மூலம் அதன் அளவு, அல்புமின் புரதம், சர்க்கரை, சிறுநீரகத்தில் ஏதேனும் படிந்திருக்கிறதா என்பதையும் நோய்த் தொற்றையும் கண்டுபிடிப்பார்கள். புற்று, காசம் போன்ற நோய்களையும் சிகிச்சை நடந்து வருவதன் முன்னேற்றத்தையும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு உடல் ஏற்றுக் கொள்ளாததையும் சிறுநீர் பரிசோதனையின் மூலமே கண்டுபிடிப்பார்கள்.

Tuesday, November 18, 2014


புவியியல் குறியீட்டு எண்
 
காப்புரிமை :: புவியியல் சார்ந்த குறியீடு

புவியியல் சார்ந்த குறியீடு: (Geographical Indication)
ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு அளிக்கப்படுவதே புவியியல் சார்ந்த குறியீடாகும். அக்குறிப்பிட்ட இடத்தின் தனித்தன்மை பெற்றதாக அப்பொருள் விளங்கும். பொதுவாக, அத்தகைய பெயர் பொருட்களின் தரத்திற்கான உத்திரவாதம் அளிக்கிறது மற்றும் பொருளின் தனித்தன்மை, அப்பொருளின் பிறப்பிடம், அதாவது அதன் நாடு போன்றவற்றை அறிய உதவுகிறது. பொது விதிகள் 1(2) மற்றும் 10 பாரிஸ் நடைமுறைப்படி தொழில் உடமை பாதுகாப்பு மற்றும் புவியியல் குறியீடுகள் ஆகியவை IPRன் கூறுகளாகும். இந்தியா, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினரான பிறகு பொருட்களின் புவியியல் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டு, 1999-ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 

புவியியல் குறியீடு என்பது ஓர் வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைக்குள், குறிப்பிட்ட இடத்துத்துக்கே உரித்தான சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் ஒரு தரமான பொருளுக்கு அல்லது கலைக்கு வழங்கப்படும் சிறப்புக் குறியீடு ஆகும். இக்குறியீட்டை பெறுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருளை அல்லது கலையை, வேறுயாரும் வியாபார நோக்கத்துடன் போலியாகவோ அல்லது, அதன் சிறப்பு அம்சங்களை வேறு வகையிலோ உபயோகப்படுத்த முடியாது. இக்குறியீட்டின் கீழ் தங்கள் பொருள் அல்லது கலையை பதிவு செய்யும் கலைஞர்களுக்கு மட்டுமே இந்தக் குறியீட்டை உபயோகிக்கும் உரிமை உண்டு. இதனை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

 
தமிழகத்தின் பல கலைப்பொருட்களும் புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன. கலைவேலைப்பாடுள்ள தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் தட்டும், தஞ்சாவூர் வீணையும் புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன. துணி வகைகளில் காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி, கோவை கோரா காட்டன், ஆரணி பட்டு, சேலம் வெண்பட்டு ஆகியன புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன. நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, நாகர்கோயில் கோயில் நகைகள், செட்டிநாட்டு கொட்டான், சுவாமிமலை வெண்கல சிலைகள், பத்தமடை பாய்,  ஆகியனவும் தமிழகத்தில்புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன. சமீபத்தில், ஊட்டியில் உள்ள தோடர் இன பெண்களின், 'எம்ப்ராய்டரி' துணி வேலைப்பாடுகளுக்கு, இந்த குறியீடு வழங்கப்பட்டது.

 

 

Thursday, November 13, 2014

மதிப்பெண் கல்வியா... மதிப்பீட்டுக் கல்வியா?

இன்றைய சமுதாயச் சூழலில் ஒரு மாணவன் நல்லவனாக வாழ மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டர், மொபைல் போன், 'டிவி', வன்முறை, ஆபாச படங்கள், அரசு பார்களை சந்தித்து முட்டி மோதி எழும்புவதற்குள், அவன் வாழ்நாளில் பாதிதுாரம் கடந்து விடுகிறான். தன்நிலை உணர்ந்து நல்லவனாக முயற்சிக்கும் போது அவன் எதிர்பார்க்கும் அங்கீகாரம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கிடைக்காமல் போகிறது. பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை ஆகிய சமூகக் கொடுமைகளைச் செய்யும் இளைஞர்கள் 15 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பது மிகப்பெரிய கொடுமை. இத்தகைய செயல்களில் ஆர்வம் காட்டும் இந்த இளைஞர்கள் வழிதவறியதற்கு யார் காரணம்?

படிக்கும் வயதில் கவனம் :

கவனம் சிதறுகிறது எனில் கல்வித்திட்டம் அவனை நல்வழிக்கு ஒருமுகப்படுத்த தவறிவிட்டது என்பது மறுக்க இயலாத உண்மை. பொருளாதார ரீதியாக அவன் வாழ கல்வி அடிப்படைத் தகுதியாக இருந்தபோதிலும், நல்லெண்ணங்களே அவனின் கல்வித்தகுதிக்கும் வித்தாக உள்ளது என்பதை இன்றையக் கல்வி அளிக்கத் தவறி விட்டது. மதிப்பெண் ரீதியிலான தேர்வுகள் ஒன்றே ஒருவனின் கல்வித்தகுதிக்குச் சான்றாகிறது. 'சமுதாய விலங்கு' என அழைக்கப்படும் மனிதன் தான் வாழும் சமுதாயத்திற்கு தன்னைத் தகுந்தவனாக்கிக் கொள்ள என்ன தகுதிகளை வளர்க்கிறது அல்லது அளிக்கிறது

இன்றைய கல்வித் திட்டம்?

இன்றைய மாணவ சமுதாயம் சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள வேண்டிய மாணவர்கள் சுயகவுரவத்திற்கு பெரும் மதிப்பு கொடுக்கிறார்கள். தான், தனது என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழும் சமுதாயச் சூழல் வளர்ந்து கொண்டிருக்கிறது. சகிப்புத்தன்மை எனபது சிறிதும் இல்லாத காரணத்தால் பிறரின் உணர்வுகள், வலிகள் மிதிபட்டு போகிறது. விளைவுகளை யோசிக்காத மனிதநேயமில்லாச் செயல்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. தான் செய்த தவறுகளுக்கான குற்றஉணர்வே இல்லாத மாணவச்சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது எனில் அவனுக்கு இந்த மனவலிமை உருவாக்கியதற்கு யாரை காரணம் காட்டப் போகிறோம்?

நம் கல்வித்திட்டம் :

மூன்று வயது வரை குடும்பத்தில் நல் அரவணைப்போடு வாழ்ந்த குழந்தை, பள்ளிக்குச் சென்றபின் அவன் கற்கும் சூழலே அவனின் ஆளுமைப் பண்புகளை உருவாக்குகிறது. அரசு திட்டப்படி அவன் ஐந்து பாடங்களை வாரத்தில் 40க்கு 30 பாடவேளை களில் கற்றுக் கொள்கிறான். மதிப்பீட்டுக் கல்வி, உடற்கல்வி, யோகா போன்ற பாடங்களுக்கு வாரத்தில் ஒருநாள் மற்றும் இரண்டு நாட்கள் மட்டுமே தரப்படுகிறது. பாடங்களை அவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் யாரும் இடைநிற்றலோ படிப்பறிவு இல்லாமலோ இல்லை என்று உலகநாடுகளுக்கு சதவீதம் காட்ட வேண்டும். அனைவருக்கும் தேர்ச்சி என்கிற பட்சத்தில் பாடங்களுக்கு எதற்காக அதிக நேரங்களை ஒதுக்கி மதிப்பெண் ரீதியிலான கல்வியை அளிக்க வேண்டும்? நல் மதிப்பீடு, வாழ்க்கை மதிப்பீட்டில்லா கல்வியால் என்ன பயன்? எட்டாம் வகுப்பு வரை பாடங்களைக் குறைத்துக் கொண்டு மாணவனின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் கல்வித் திட்டத்தை உருவாக்கலாமே. ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி, யோகா, தற்காப்புப் பயிற்சி, நல்மதிப்பீட்டுக் கல்வியை மூன்று வயது முதல் 13 வயது வரை நாம் அளிக்கும் போது, அவன் மனிதனாக வாழக்கூடிய தகுதிகளைக் கற்றுத் தருகிறோம். ஆர்வமுடன் மாணவன் பள்ளியில் கல்வி கற்கும் சூழலையும் உருவாக்குகிறோம். நம் கல்வித் திட்டத்தின் படி மதிப்பெண் பெற்றெடுத்த குழந்தைகளைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த 10 சதவீத மதிப்பெண் குழந்தைகள் தான் பொருளாதார ரீதியாக உயர்நிலைக்குச் செல்கிறார்கள். மீதமுள்ள 90 சதவீதம் மதிப்பெண் எடுக்கத் தவறி விடுகின்றனர். நாமும் நல்மதிப்பீட்டுக் கல்வியை அளிக்கத் தவறி விடுகிறோம். இவையிரண்டும் சேர்ந்து சமுதாய சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

மேலை நாடுகளின் கல்வித் திட்டம்

நாளைய சமுதாயம் மனிதன் வாழக்கூடிய சமுதாயமாக அமைய வேண்டுமெனில் நம் கல்வித் திட்டத்தில் சீரிய மாற்றங்களை மிக விரைவில் நடைமுறைபடுத்த வேண்டும். மேலைநாடுகளில் பள்ளிப்பருவம் முடிந்து கல்லுாரியில் அடியெடுத்து வைக்கும் முன் பல தகுதிச் சான்றிதழ்களை அடிப்படை தகுதிகளாக அவன் பெற்றிருக்க வேண்டும்.

*முதியோர் மற்றும் கருணை இல்லங்களில் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய சான்றிதழ்கள்.
* ஆறு மாதம் அல்லது ஓராண்டு காலம் பிற கண்டங்களில் எந்த நாட்டிலாவது தன்னார்வத் தொண்டு செய்ததற்கான சான்றிதழ்.
*குறிப்பிட்ட எண்களில் ஆய்வுக் கட்டுரைகள், ஒப்படைப்புகள்.
*சமுதாய நலன் பயக்கும் திட்டங்களில் பங்கேற்ற சான்றிதழ்.
*தன் தனிப்பட்ட திறமைகளை வளர்த்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்.
இவையனைத்திற்கும் புள்ளிகள் ரீதியிலான மதிப்பீடுகளை அளிக்கின்றனர். இதனுடன் அவன் படித்த கல்வி மதிப்பெண்களும் இணைக்கப்படுகிறது. இப்படி பல வகையிலும் மாணவனை சமுதாய நலத்திட்டங்களில் ஊக்குவிக்கும் வண்ணம் செயல்முறை பயிற்சிகளை வகுத்துள்ளனர். படிக்கும் காலத்தில் தவறான பாதையின் பக்கம் போகாதவாறு நல்வழியில் திசை திருப்புகின்றனர்.இத்தகைய கல்வித் திட்டங்கள் நம் நாட்டிற்குத் தேவையாக இருக்கும் பட்சத்தில் ஏன் இத்தகைய செயல்முறை பயிற்சிகளை ஊக்குவிக்கக் கூடாது? ஜாதி மற்றும் மதிப்பெண் ரீதியிலான ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பலன் தரும் மதிப்பீட்டுக் கல்வி :

மாணவன் வாழும் சமுதாயச் சூழலுக்கேற்ப நல் மதிப்பீட்டுக் கல்வியை வரையறுக்கலாமே. கிராம சுகாதார திட்டங்கள், பசுமை புரட்சி திட்டம், விழிப்புணர்வு செயல்பாடு, மாசு கட்டுப்பாடு, நுாலகங்களில் பணியாற்றும் வாய்ப்பு, சாலை பாதுகாப்பு, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், முதியோர், மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லங்களில் பணியாற்றும் வாய்ப்பு, தற்காப்புப் பயிற்சி, பொது இடங்களை துாய்மை செய்தல், உடற்பயிற்சி, யோகா பயிற்சி, படிக்கும் காலத்தில் உழைத்து வேலை செய்தல். இதுபோன்ற திட்டங்களில் மாணவனை பங்கேற்கச் செய்யும் போது அவன் மனிதநேயத்தோடு சமூகத்தை நேசிக்கக் கற்றுக் கொள்கிறான். சட்ட திட்டங்களை மதிக்கக் கற்றுக் கொள்கிறான். சமுதாய நலனுக்காக முயற்சி எடுக்கும் சமூகத் தொண்டனாகும் வாய்ப்புகளைப் பெறுகிறான். தன்னம்பிக்கையோடு ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடுகிறான்.
இச்செயல்பாடுகளை மாணவச் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கின்றோம்.

-மி.மரிய அமலி
'முத்தமிழ்க் காவலர்' - கி.ஆ.பெ.விசுவநாதம்

தமிழ் கூறு நல்லுலகிற்கு திருச்சி தந்த பெருங்கொடை கி.ஆ.பெ.விசுவநாதம் (1899--1994). 'முத்தமிழ்க் காவலர்' என தமிழக மக்களால் போற்றப்படும் ஆளுமைக்குச் சொந்தக்காரர். 'ஆயிரம்பிறை கண்டவர்' என்றாற்போல்
இம்மண்ணுலகில் 95 ஆண்டு காலம் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டிய கொள்கைச் சான்றோர் கி.ஆ.பெ.

செவ்விய தமிழரின் பண்புகள்:

செவ்விய தமிழரின் பண்புகளாகப் பன்னிரண்டை, அகர முதல் ஒளகாரம் வரையிலான பன்னிரண்டு உயிரெழுத்துக்களைக் கொண்டு கி.ஆ.பெ. புலப்படுத்தி இருக்கும் அழகே அழகு.

அறத்தின் வழி நிற்றல்
ஆண்மையில் உயர்தல்
இன்பத்தில் திளைத்தல்
ஈதலிற் சிறத்தல்
உள்ளத்தில் தெளியராதல்
ஊக்கத்தில் தளராதிருத்தல்
எவரையும் தமராய்க் கொள்ளல்
ஏற்றத்தாழ்வின்றி வாழ்தல்
ஐயந்திரிபறப் பேசுதல்
ஒழுக்கத்தைக் காத்தல்
ஓரஞ்சாராது நிற்றல்
ஒளவியந்தன்னை அகற்றல்
செவ்விய தமிழரின் பண்பு !


சிறப்பு 'ழ'கரம்:

தமிழ் எழுத்துக்களில் 'ழ' என்னும் எழுத்து தமிழுக்குச் சிறப்புத் தருவது. எந்த மொழியிலும் இதுபோன்ற எழுத்து கிடையாது. அதனால் புலவர்கள் இதனை 'சிறப்பு ழகரம்' என்றே கூறுவர். இந்தச் சிறப்பு 'ழ' ஒலி சிலரால் சரியாக உச்சரிக்கப்படுவதில்லை.
  • திருச்சிக்குத் தெற்கே சிலர் 'ழ'வை 'ள' ஆக உச்சரிப்பர் (எ-டு: வாழைப்பழம் -- வாளப்பளம்).
  • திருச்சிக்குக் கிழக்கே, தஞ்சை மாவட்டத்தில் சிலர் 'ழ'வை 'ஷ' ஆக உச்சரிப்பர் (எ-டு: மார்கழித் திருவிழா -- மார்கஷித் திருவிழா).
  • சென்னை போன்ற இடங்களில் சிலர் 'ழ'வை 'ஸ' ஆக்கிப் பேசுவர் (எ-டு: இழுத்துக் கொண்டு- - இஸ்த்துக்குனு).
  • திருச்சிக்கு மேற்கே, கோவை போன்ற இடங்களில் சிலர் 'ழ'வை 'ய' ஆக ஒலிப்பர் (வாழைப்பழம்- வாயப் பயம்).
தமிழுக்கு உள்ள இந்தச்சிறப்பு 'ழ'கரம், தமிழ் மக்களிடத்துப் படுகிற பாட்டைக் கி.ஆ.பெ.விசுவநாதம் தமக்கே உரிய பாணியில் சுவையாக எடுத்துக்-காட்டியுள்ளார்.“நான் ஒரு தடவை கோவைக்குச் சென்ற போது கடைத் தெருவில் வாழைப் பழத்தை விற்கும் ஒருவன், 'வாயப் பயம்' என்றே கூறி விற்றுக் கொண்டிருந்தான்.என்னிடம் வந்து, தட்டை இறக்கி வைத்து, 'வாயப் பயம் வேணுங்களா?' என்றான். எனக்கு வியப்பு ஒரு புறம்; கோபம் ஒரு புறம். 'நீ எந்த ஊர் அப்பா?' என்றேன். அவன், 'கியக்கங்கே' என்றான். நான், '(கிழக்கு) கியக்கேயிருந்து இங்கே எதுக்கு வந்தீங்க?' என்றேன்.அவன், 'புயக்க வந்தேங்க' (புயக்க - பிழைக்க) என்றான். 'கியக்கேயிருந்து புயக்க வந்தேன்' என்றதும் எனக்குக் கோபம் அதிகமாகியது. 'ஏம்பா, தமிழை இப்படிக் கொலை பண்ணுகிறீர்கள்?' என்று அதட்டிக் கேட்டேன். அவன் இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டுக் கொண்டே, 'அது எங்க வயக்கங்க' என்றான். நான் உடனே அவனை விட்டு எழுந்தே போய்விட்டேன்”. இங்ஙனம் மெல்லிய பூங்காற்றாய், கி.ஆ.பெ.வின் எழுத்திலும் பேச்சிலும் நகைச்சுவைத் தென்றல் வீசி நின்ற தருணங்கள் நிரம்ப உண்டு.

நகைச்சுவையும், நையாண்டியும்

நகைச்சுவை பற்றி கி.ஆ.பெ.விசுவநாதத்திற்கு தனிப்பட்ட கருத்து இருந்தது. அவரது பார்வையில் நகைச்சுவை வேறு; நையாண்டி வேறு. நகைச்சுவை செல்லுகின்ற பாதையில் ஒரு நுாலிழை தவறினாலும் நையாண்டியாகக் காட்சியளித்து விடும். நகைச்சுவை, அறிஞர்களை மகிழ்விக்கும்; நையாண்டி, மற்றவர்களை மகிழ்விக்கும். 'ஒருவன் கூறியது நகைச்சுவையா, நையாண்டியா?' என்பதை அறிய விரும்பினால், 'அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தவர்கள் அறிஞர்களா, மற்றவர்களா?' என்பதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

'எது நகைச்சுவை?' என்பதற்கு உதாரணமாகக் கி.ஆ.பெ.விசுவநாதத்தின் 'நடையும் உடையும்' என்னும் தலைப்பில் அமைந்த குட்டிக் கதையை பார்ப்போம். “தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றுாரிலிருந்து ஒரு குடியானவன் பம்பாய் பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுவதும் சுற்றிப் பார்த்தான். மாலையில் கடற்கரையைப் பார்க்கப் போனான்.அங்கே, கடற்கரையில் ஒரு பையன் அலையை நோக்கி வேகமாக ஓடுவதும், தண்ணீரைக் கண்டதும் பின்வாங்குவதும், பிறகு அலையிலேயே காலை வைத்துக் கொண்டு விளையாடுவதுமாக இருந்தான். அப்பொழுது ஒரு பெரிய அலை வந்தது.அதைக் கண்ட குடியானவன் பயந்து போய், அப்பையனின் கூட வந்தவரைப் பார்த்து, 'சிறுபையன் சுட்டித்தனமாக விளையாடினால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே, அவனை அழைத்து உங்கள் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்' என்றான்.

அது கேட்ட அந்த ஆள் சிரித்து, 'அது பையன் அல்ல, பெண்' என்றார். 'அப்படியா? நீங்கள்தான் அப்பெண்ணின் தந்தையா?' என்று கேட்டான் குடியானவன். அவர், 'இல்லையில்லை நான் அந்தப் பெண்ணுக்குத் தந்தையல்ல, தாய்' என்று சொன்னவுடன் குடியானவனின் வியப்புக்கு எல்லையே இல்லை.பெண்ணாக ஆணும், ஆணாகப் பெண்ணும் வேற்றுமை தெரியாத அளவுக்கு நடை, உடை, பழக்கங்களை மாற்றி நடந்துகொள்கின்றனர்.இதுபோன்ற 90 சுவையான கதைகளைத் தொகுத்து தனி ஒரு நுாலாகவே வெளியிட்டுள்ளார் கி.ஆ.பெ. இக்கதைகளுக்கு அவர் தந்திருக்கும் தலைப்பு 'அறிவுக் கதைகள்'.

கல்லாமையின் இழிவு

சான்றோர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை கி.ஆ.பெ.விசுவநாதம் தம் நுால்களில் பதிவு செய்துள்ளார்.
ஒரு சுவையான நிகழ்ச்சிக் குறிப்பு இதோ: “கவிராஜர் ஜெகவீர பாண்டியனார் பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். ஒரு நாள் மதுரையில் கி.ஆ.பெ.அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், சிற்றுாரில் இருந்து கவிராஜரைப் பார்க்க ஒருவர் வந்தாராம். அவரைக் கண்டதும் ஜெகவீர பாண்டியர் கி.ஆ.பெ.விசுவநாதத்துடன் பேசுவதை நிறுத்திவிட்டு, 'வாருங்கள், அமருங்கள், என்ன செய்தி?' என்று கேட்டாராம்.அதற்கு அவர், 'ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்!' என்றாராம். 'பார்த்தாயிற்றே; பின் என்ன செய்தி?' என்று மறுபடியும் கேட்டாராம். வந்தவர் அதற்கும் திரும்பத் திரும்ப, 'ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்' என்றே சொன்னாராம். கவிராஜர் சிறிது யோசித்து - சற்றுப் பேசி அனுப்ப எண்ணி, 'தங்களுக்குக் குழந்தை உண்டா?' என்று கேட்டாராம். 'இருக்கிறான், ஒரே பையன்' என்றாராம் வந்தவர். 'என்ன படித்திருக்கிறான்?' என்று கவிராஜர் கேட்க, வந்தவர் 'எங்கே படித்தான், ஒன்றும் படிக்கவில்லை' என்று சொல்ல, கவிராஜர், 'என்ன செய்கிறான்?' என்று கேட்க, அவர் 'வீட்டிலே இரண்டு எருமைகள் மேய்த்துக் கொண்டிருக்கிறான்' என்று சொன்னாராம்.உடனே கவிராஜர் எழுந்து, அவரை எழச் செய்து, தட்டிக் கொடுத்து, வெளிவாயிற்படி வரை அழைத்துக் கொண்டு போய் நின்று, “இனி யாராவது 'உங்களுக்கு எத்தனை எருமைகள்?' என்று கேட்டால், 'இரண்டு என்று சொல்ல வேண்டாம். மூன்று எருமைகள் உண்டு என்று சொல்லுங்கள்' என்று சொல்லி அவரை வழியனுப்பி வைத்தாராம்”.இந்நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டிவிட்டு, “கல்லாமையின் இழிவைக் கவிஞர் உணர்த்தியது - காலம் பல கடந்தும் என் உள்ளத்தை விட்டு அகலவில்லை” என கி.ஆ.பெ.விசுவநாதம் கூறியிருக்கிறார்.

-பேராசிரியர் இரா.மோகன்,

Friday, November 7, 2014

மனிதன் வாழ்வாங்கு வாழும் கலை

எவனொருவன் பின்வரும் முறையில் வளர்ச்சியை வாழ்கையில் பதிக்கிறானோ அவனே இவ்வுலகில் மிசைபட வாழ்ந்தவனாகிறான். 1. தான், 2. குடும்பம், 3. சுற்றம், 4. ஊர், 5. நாடு, 6. உலகம் என்ற வரிசையில் வாழ்ந்து வளர்ச்சியை காண வேண்டும்.

தான் - கல்வி மற்றும் ஒழுக்கத்தில் வளர்தல் மற்றும் சம்பாதித்தல்.

குடும்பம் - பெற்றோர், சகோதர சகோதரிகள், கணவன்/மனைவி மற்றும் பிள்ளைகளின் வளர்ச்சியில் பங்கேற்பது, நேசிப்பது.

சுற்றம் - முடிந்தவரை பங்காளிகள் மற்றும் உறவுமுறைகளின் வளர்ச்சிக்கு உதவுவது.

ஊர் - பள்ளிக்கூடம், நூலகம், மருத்துவமனை, வங்கி, அஞ்சலகம், கோயில், குளம், பூங்கா இன்னபிற வசதிகள் அமைந்திட ஊர் மக்களோடு கலந்து ஒத்து வாழ்தல்.

நாடு - ஆட்சியமைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், அறிவியல்/தொழில்நுட்ப மேம்பாடுகள் போன்றவற்றுக்காக உழைத்தல்.

உலகம் - உலக மாற்றங்களைப் பற்றிய அறிவு, பிரச்சினைகளை இயற்கையோடு இயைந்து தீர்த்தல், இயற்கை வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.

இதற்கான உளப்பயிற்சியும், உடற்பயிற்சியும், முயற்சியும் நாள்தோரும் மேற்கொள்ளப்பட வேண்டும். முயற்சி மட்டுமே வெற்றி தருவதில்லையாதலால், இறைவன் மற்றும் பெரியோரின் ஆசியை வணங்குதல் உறுதுணையே.
''அணிலே, அணிலே, ஓடிவா!
அழகு அணிலே ஓடிவா!
கொய்யா மரம் ஏறிவா!
குண்டுப்பழம் கொண்டு வா!
பாதிப் பழம் உன்னிடம்
பாதிப் பழம் என்னிடம்
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்”

********************************

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம் அல்வா போல் மாம்பழம்
தங்க நிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா?
இங்கு ஓடி வாருங்கள்;பங்கு போட்டுத் தின்னலாம்.

*******************************

''வட்ட மான தட்டு.
தட்டு நிறைய லட்டு.
லட்டு மொத்தம் எட்டு.
எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு.
கிட்டு நான்கு லட்டு;
பட்டு நான்கு லட்டு.
மொத்தம் தீர்ந்த தெட்டு.
மீதம் காலித் தட்டு!”

********************************

''ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை
நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்.
திங்கட்கிழமை பிறந்த பிள்ளை
தினமும் உண்மை பேசிடுமாம்
செவ்வாய்க்கிழமை பிறந்த பிள்ளை
செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்
புதன்கிழமை பிறந்த பிள்ளை
பெற்றோர் சொல்படி நடந்திடுமாம்
வியாழக்கிழமை பிறந்த பிள்ளை
மிகவும் பொறுமை காட்டிடுமாம்.
வெள்ளிக்கிழமை பிறந்த பிள்ளை
வேண்டும் உதவிகள் செய்திடுமாம்
சனிக்கிழமை பிறந்த பிள்ளை
சாந்தமாக இருந்திடுமாம்
இந்தக் கிழமை ஏழுக்குள்
எந்தக் கிழமை நீ பிறந்தாய்?”

*******************************

''தோலை உரித்த பிறகு தான்
சுளையைத் தின்று பார்க்கலாம்!
ஓட்டை உடைத்த பிறகு தான்
உள்ளே பருப்பைக் காணலாம்!
உலையில் அரிசி வெந்து தான்
உண்டு பசியைப் போக்கலாம்! …
பாடு பட்ட பிறகு தான்
பலனைக் கண்டு மகிழலாம்!”
இயன்முறை மருத்துவம் : மருந்துகளுக்கு மாற்றாக மருந்தில்லா மருத்துவம்

மருந்துகளுக்கு மாற்றாக மருந்தில்லா மருத்துவமாக இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) திகழ்கிறது. இதன் தத்துவம் வலியை நீக்கி, வலிமை உண்டாக்கி, உடலியக்கம் பெறச்செய்தல் என்பதாகும். வலியுள்ள இடத்தில் ரத்த ஓட்ட அளவை சீர்படுத்தி, அதற்குரிய தசையின் வலிமையை மேம்படுத்தி, உடல் இயக்கத்தை ஏற்படுத்தி, தீர்வளித்தல் என்பது இதன் பொருள். உடல் இயக்கத்தை முதன்மைப்படுத்தி பயிற்சி மற்றும் சிகிச்சை மருத்துவமாக இது விளங்குகிறது.

பக்கவிளைவு இல்லை:

இந்த பயிற்சி முறையில் மின்கருவி சிகிச்சை, ஒளிக்கதிர் சிகிச்சை, நீர்நிலை சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் இயக்கத்தின்போது, இதயத்துடிப்பு அதிகரிப்பதால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. எனவே, உடலில் அனைத்து பாகங்களும் நன்றாக இயங்குகின்றன. ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இம்மருத்துவத்தின் மூலம் மருந்துகள் இன்றி வலி நிவாரணம் பெற முடியும். வலி நிவாரணத்தில் மட்டும் 40 சதவீத மருந்துகளை தவிர்க்கலாம். மருந்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்கலாம். இந்த அவசர உலகில் போதிய உடல் இயக்கத்தை விட்டு விட்டு, உடற்பருமன் ஏற்பட்டதன் காரணமாகவும், குண்டும் குழியுமான ரோட்டில் அதிக துாரம் வாகனம் ஓட்டுவதாலும், தொடர்ச்சியாக பல மணி நேரம் கம்ப்யூட்டர் பணியினாலும் கழுத்து, முதுகு மற்றும் மூட்டு வலிகள் ஏற்படுகின்றன. உடல் இயக்கம் இல்லாததால், உடல் தசைகள் அனைத்தும் வலுவிழக்கின்றன. இதுவே அனைத்து வலிகளுக்கும் மூலகாரணம்.

அனைத்திற்கும் சிகிச்சை:

பிறவியில் ஏற்படும் தசை, நரம்பு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்குறைவு, தசை சிதைவு நோய், மூளை நரம்பு பாதிப்பு முதுகுத்தண்டுவட முறிவினால் ஏற்படும் வாதம் ஆகியவற்றிற்கு பின்தொடர் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிகிச்சைக்கும் இயன்முறை மருத்துவம் பயன்படுகிறது. படுக்கைப்புண் ஏற்படாமல் தவிர்த்தல், எலும்பு அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இருதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைக்குப்பின் தொடர் சிகிச்சை, தீக்காய சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளுக்குப்பின் பின்தொடர் சிகிச்சைகளுக்கும் இந்த மருத்துவமுறை உதவுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கும், அவர்களின் உடற்தகுதியை மேம்படுத்துவதற்கு தேவையான பயிற்சியை அளிப்பதற்கும், எலும்பு தேய்மானம், சவ்வு மற்றும் தசைநார் வீக்கத்தினால் ஏற்படக்கூடிய வலியை போக்குவதற்கான பெரும் பங்கு இயன்முறை மருத்துவம் வகிக்கிறது.

வலியின்றி வாழலாம்:

உடல் இயக்க மருத்துவத்தின் பயிற்சிகள் பொதுவான பயிற்சிகள் போல் அல்லாமல் வேறுபட்டு உள்ளதால், இயன்முறை மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று உடல் இயக்க பயிற்சி செய்ய வேண்டும். எந்த இடத்தில் உடல் இயக்கத்தை தவிர்க்க வேண்டும் என அவர் ஆலோசனை வழங்குவார். மேலைநாடுகளில் வலி நிவாரண மருந்துகளுக்கு கட்டுப்பாடு உள்ளதால், உடல் இயக்கப்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் மருந்துகள் சாதாரணமாக கிடைக்கும் சூழல் உள்ளது. ஆகவேதான் நாம் பயிற்சியின் முக்கியத்துவத்தை உணராமல் உள்ளோம். ஒவ்வொரு வேளையும் தவறாமல் மருந்து, மாத்திரைகளை உட்கொள்வதுபோல, உடல் இயக்கப்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்துவந்தால் நன்மைகள் விளையும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நலமோடும் வலிமையோடும் வலியின்றி வாழ, மருந்தில்லா இயன்முறை மருத்துவம் மிக மிக அவசியம்.

- ரெ.கணேஷ் பாண்டியன்