Monday, November 24, 2014

சிறுநீர் பரிசோதனை

“சிறுநீர் என்பது உடலிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்தானே என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது. அது நம் உடல்நலனைக் காட்டும் மருத்துவ அறிக்கை. உடலில் இருக்கும் நோய்களையும் எதிர்காலத்தில் வர இருக்கும் நோய்களையும் முன்னரே உணர்த்தும் எச்சரிக்கை மணி’’ என்று சிறுநீர் பற்றி அறிமுகம் கொடுக்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவரான சௌந்தர்ராஜன். சிறுநீர் பற்றியும் அதன் பரிசோதனைகள் பற்றியும் நம்மிடம் அவர் விளக்கியதிலிருந்து...

மூன்று அடையாளங்கள்

மருத்துவத்தில் இருக்கும் மற்ற பரிசோதனை களைவிட மிகவும் எளிமையானது சிறுநீர் பரிசோதனை. குறைந்தபட்சம் 40 ரூபாயில் செய்துவிட முடியும். சோதனை முடிவுகளையும் உடனே சொல்லிவிடுவார்கள். வெளியேறும் அளவு, நிறம், மணம் ஆகிய மூன்றின் மூலம் உடலின் ஆரோக்கியத்தை எளிதில் எடுத்துச் சொல்லிவிடும் ஆற்றல் கொண்டது சிறுநீர்.

ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை சிறுநீர் வெளியேற வேண்டும். இதில் 400 மி.லி.க்குக் குறைந்தாலோ, 2,500 மி.லி.க்கு அதிகமானாலோ, நோயின் வெளிப்பாடாகவே இருக்கும். பிறந்த குழந்தைக்கு இந்த சிறுநீரின் அளவு 200 மி.லி.யில் ஆரம்பிக்கும். இதுதான் பெரியவர்களானதும் ஒன்றரை லிட்டராக மாறுகிறது. பிறந்த குழந்தை 24 மணிநேரத்துக்குள் சிறுநீர் கழிக்காவிட்டாலும் பிறவிக் கோளாறுகள் இருக்க வாய்ப்பு உண்டு.

சிறுநீரின் நிறம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது நியதி. நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி மஞ்சள் நிறமாக வெளியேறுவது இயல்பானதுதான். ஆனால், தொடர்ந்து மஞ்சள் நிறமாகவே வெளியேறினால், அது மஞ்சள் காமாலையின் அறிகுறி. காச நோய்க்கான மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு காவி நிறத்தில் வெளியேறும். பால் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது யானைக்கால் நோயின் அடையாளமாக இருக்கலாம். சிறுநீரகத்தில் தொற்று இருப்பவர்களுக்கு சுண்ணாம்பு நீர் போல வெளியேறும். மரபியல்ரீதியான குறைபாடுகள் இருப்பவர்களின் சிறுநீரை வெயிலில் வைத்தால் பழுப்பு நிறமாகிவிடும். சிறுநீர் துர்நாற்றத்துடன் இருப்பது நீரிழிவு, சிறுநீரகத்தில் நோய்த்தொற்று போன்ற குறைபாடுகளின் அடையாளமே. சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வெளியேறு வது ஆபத்தானது என்பதை விளக்க வேண்டியதில்லை.
இவர்கள் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். தண்ணீர் சேகரிக்கும் சிறுநீரகங்கள்சிறுநீர் தயாரிப்பதுதான் சிறுநீரகங்களின் முக்கிய வேலை என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில், உடலுக்குத் தேவையான தண்ணீரை சேகரித்து வைப்பதும் சிறுநீரகங்கள்தான். நம் உடலில் ஓடும் 5 லிட்டர் ரத்தத்தையும் சுத்திகரித்துக் கொண்டே இருக்கின்றன சிறுநீரகங்கள். ரத்தத்தில் கலக்கும் தண்ணீர் உள்பட பல உணவுகளை தேவையான சத்துகள், தேவையற்ற கழிவுப் பொருட்கள் என இரண்டாகப் பிரிக்கின்றன. இதை ஆரம்பகால சிறுநீர் என்கிறோம். இப்படி ரத்தத்தில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் 125 மி.லி. கழிவுப் பொருட்கள் வீதம், நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் சிறுநீர் பிரிக்கப்படுகிறது.

இதில் 95 சதவிகித நீரை உடலின் நீர் தேவைக்காக சிறுநீரகங்களே மீண்டும் எடுத்துக் கொள்ளும். மீதி இருக்கும் சிறுநீரே வெளியேறுகிறது. தண்ணீரோடு நம் உடலில் இருக்கும் யூரியா, கிரியாட்டினின் போன்ற புரதக் கழிவுகளை வெளியேற்றுவதும் சிறுநீர்தான். மருத்துவ அறிக்கை சிறுநீர் பரிசோதனையில் முக்கியமானது அல்புமின் பரிசோதனை. இந்தப் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் உடலின் புரதம் வெளியேறுகிறது என்று அர்த்தம்.

இது சிறுநீரகப் பாதிப்பின் ஆரம்பம். சிறுநீரில் சர்க்கரை இருந்தால், அது நீரிழிவு என்பது பலருக்கும் தெரியும். சிறுநீரகத்தில் படியும் பொருட்களை வைத்து கிருமிகள் இருக்கிறதா, சிறுநீரக அழற்சிகள் இருக்கின்றனவா, நோய்த் தொற்றுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.  இதன்மூலம் சிறுநீரகங்கள் செயலிழக்கும் வாய்ப்பு இருப்பதையும் சிறுநீரகத்தில் கல் உருவாக இருப்பதையும் கண்டுபிடித்துவிட முடியும். சிறுநீர் பரிசோதனை எளிமையானது என்பதால், பெரிய மருத்துவமனைகளில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. சாதாரண பரிசோதனை நிலையங்களிலேயே செய்து கொள்ளலாம்.

எல்லோரும் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா?

சிறுநீர் பரிசோதனையை எல்லோரும் செய்துகொள்ள வேண்டும் என்பதில்லை. குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரகப் பாதிப்புகள், ரத்த அழுத்தம், நீரிழிவு இருந்தால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கை, கால்கள், முகம் போன்றவற்றில் வீக்கம் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சிறுநீர் போகும்போது எரிச்சல் இருந்தாலோ, நிறம் மாறினாலோ, அளவுகள் கூடினாலோ, குறைந்தாலோ பரிசோதனை அவசியம். சிறுவயதில் சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்தக் காரணங்களோடு, 35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஒவ்வொரு வருடமும் இந்த முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும்போது சிறுநீர் பரிசோதனையும் அடங்கிவிடும். கர்ப்பிணிகள் சிறுநீர் பரிசோதனை செய்து கொள்வது தாய், சேய் இருவருக்கும் நல்லது. நோய்க் குறைபாடுகள் இருப்பவர்கள் மட்டும் மாதம் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

உடல் சொல்வதைக் கேளுங்கள்

நம் உடலில் ‘பயாலஜிகல் கிளாக்’ என்ற உயிர்க்கடிகாரம் செயல்படுகிறது. அந்தக் கடிகாரம்தான் நம் உடல் தேவைகளை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. எனக்கு உணவு வேண்டும், தூக்கம் வேண்டும் என்று கேட்பது அந்த கடிகாரம்தான். இதேபோலத்தான் தனக்குத் தண்ணீர் தேவை என்றாலும் தாகத்தின் மூலம் உடல் அதை உணர்த்தும். அந்த தாகம் தீரும் அளவுக்குத் தண்ணீர் குடிப்பதே போதுமானது. குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள், கை, கால்கள் வீக்கம் உள்ளவர்கள் தண்ணீர் அதிகம் குடிக்கக் கூடாது.

மற்றவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடித்தாலே போதுமானது. ஏற்கெனவே நாம் சாப்பிடும் சாதம், காய்கறிகள், பழங்கள், தேநீர், பழரசங்கள், சாம்பார், ரசம், தயிர் என்ற எல்லா உணவுப் பொருட்களிலும் தண்ணீர் கலந்திருப்பதை மறக்க வேண்டாம். இதில் சின்ன விதிவிலக்கு, சிறுநீரகக் கல் இருப்பவர்கள், சிறுநீரகத் தொற்று இருப்பவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதில் தவறில்லை.

சிறுநீரகத் தொற்று

சிறுநீரகத் தொற்று (Urinary infection) நம் ஊரில் பரவலாக எல்லோரிடமும் காணப்படும் ஒரு பிரச்னை. சுகாதாரக் குறைவால் சிறுநீரகப் பாதையில் நுண்கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதையே சிறுநீரகத் தொற்று என்கிறோம். சுகாதாரமான கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். என்றாலும், தனிமனித சுகாதாரம் காரணமாகவே சிறுநீரகத் தொற்று அதிக அளவில் ஏற்படுகிறது. இது ஆண்களைவிட பெண்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம். மலத்துவாரமும் சிறுநீர்ப் பாதையும் அருகருகில் இருப்பதால் பெண்களுக்கு இந்த நோய்த்தொற்று அதிகமாகிறது. மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத காரணத்தாலும் ஏற்படுகிறது (மாதவிலக்கு நின்ற பெண்களுக்கும் ஏற்பட லாம்).

வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் போதுமான கழிவறை வசதிகள் இல்லாதபோது சிறுநீரை அடக்கி வைத்திருப்பதும் காரணமாகிவிடுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்று குழந்தையையும் பாதிக்கும் என்பதால் அலட்சியம் காட்டக் கூடாது. குழந்தைகளுக்கு சிறுநீரகத் தொற்று அதிகமாக இருந்தால் பிறவிக் குறைபாடு கள் ஏதேனும் இருக்க வாய்ப்பு அதிகம். இது பெண்களின் நோயாக இருந்தாலும், ஆண்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் ஆபத்து அதிகம். அதனால், சுத்தம் பேண வேண்டும், சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது என்ற காரணங்கள் ஆண்களுக்கும் பொருந்தும். நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட வர்களுக்கு Silent urinary infection என்று அழைக்கப்படும் அளவுக்கு, அறிகுறியே இல்லாமல் இந்தத் தொற்று ஏற்படும். இது சிறுநீர் பரிசோதனை செய்யும்போதுதான் தெரியும் என்பதால் கவனம் தேவை.

தம்பதியர் கவனத்துக்கு...

சிறுநீரகத் தொற்று பாலியல் காரணங்களாலும் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு ‘ஹனிமூன் சிஸ்டைட்டிஸ்’ என்று பெயர். உறவுக்குப் பின்னர் ஆண், பெண் இருவருமே தங்களை சுத்தம் செய்து கொள்வது அவசியம். தம்பதியில் ஒருவருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் மற்றவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறுநீரகச் செயலிழப்புக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் இந்த சிறுநீரகத் தொற்றும் முக்கியக் காரணம் என்பதால் அலட்சியம் கூடாது. சிறுநீர்ப் பாதையில் எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீருடன் ரத்தம் வருவது, அடிவயிற்றில் வலி, காய்ச்சல், சிறுநீர் நிறம் மாறுவது போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் எச்சரிக்கையாகி விடுங்கள். 

சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரகங்கள் செயலிழப்பதில் தற்காலிகச் செயலிழப்பு, நிரந்தரச் செயலிழப்பு என்று இரு வகைகள் இருக்கின்றன. தற்காலிகச் செயலிழப்பு வருகிறவர்களுக்கு உடனடியாக சிறுநீர் நின்றுவிடும். இதற்கு ‘கிட்னி ஷட்டவுன்’ என்று பெயர். வயிற்றுப்போக்கு, வாந்தி, பாம்பு கடித்தவர்கள், மருந்து அலர்ஜி போன்ற காரணங்களால் திடீரென சிறுநீர் நின்றுவிடும். சிகிச்சைக்குப் பின்னர் சரியாகிவிடும். நிரந்தரச் செயலிழப்பு ஏற்படுவதாக இருந்தால், அதன் அறிகுறியாக அதிகமான சிறுநீர் வெளியேறும். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த நிரந்தரச் செயலிழப்பு ஏற்படும். சிறுநீர் அதிகமாக வெளியேறுவதால் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமில்லை. வயதானவர்களுக்கும் நீரிழிவு உள்ளவர் களுக்கும் சிறுநீர் அடிக்கடி வருவது சாதாரணமானதுதான்.

சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா?

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது சிறுநீர் பரிசோதனை. நீரிழிவு நோயை சிறுநீர் பரிசோதனையின் மூலமே முதன்முதலில் கண்டுபிடித்தார்கள்.
i) சிறுநீர் பரிசோதனை செய்யும்போதுதான் சிறுநீரை சேகரிக்க வேண்டும். அதற்கு முன்னரே சேகரிக்கக் கூடாது. சிறுநீர் சேகரிக்கும் முன்னர் ஓடும் தண்ணீரில் உறுப்புகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சோப், டிஸ்இன்ஃபெக்டன்ட் போன்றவற்றால் சுத்தம் செய்யக் கூடாது. இதனால், சோதனை முடிவுகள் தவறாகக்கூடும். பெண்கள் மாதவிலக்கு நாட்களில் பரிசோதனை செய்யக் கூடாது.
ii) பரிசோதனைக்காக இரண்டு குப்பிகள் கொடுப்பார்கள். ஒன்று சாதாரண பரிசோதனைக்காக... மற்றொன்று நோய்த்தொற்றைக் கண்டுபிடிப்பதற்காக. கர்ப்பமடைந்திருப்பதை சாதாரண பரிசோதனையிலேயே கண்டுபிடித்துவிடலாம்.
iii) நோய்த் தொற்றைக் கண்டுபிடிக்க சிறுநீரை பரிசோதனைக் கூடத்தில் வைத்து பாக்டீரியா, வைரஸ் போன்ற செல்கள் வளர்கின்றனவா என்று பார்ப்பார்கள். சாதாரண பரிசோதனைக்கு முதலில் வரும் சிறுநீரையும் இரண்டாவது பரிசோதனைக்கு நடுவில் வரும் சிறுநீரையும் சேகரிக்க வேண்டும். மிகவும் சுத்தமாக, கைகள், பஞ்சு போன்றவை படாமல் கவனமாக சேகரிக்க வேண்டும். இதற்கு ஆரம்பத்தில் வருவதையோ, கடைசியில் வருவதையோ  சேகரிக்கக் கூடாது.
iv) சிறுநீரை குப்பி நிறைய பிடிக்க வேண்டிய தில்லை. பாதிக் குப்பி போதுமானது. காலை வேளையில் சிறுநீர் பரிசோதனை செய்வதே நல்லது. இதில்தான் நிறைய தகவல்கள் கிடைக்கும்.
v) வயிற்றுக்குள் கரு வளரத் தொடங்கிவிட்ட பிறகு பெண்ணின் உடலுக்குள் நடைபெறும் ஹார்மோன் மாற்றங்கள் சிறுநீரில் பிரதிபலிக்கும். கர்ப்பமடைந்திருப்பதை இதன் மூலமே உறுதிப்படுத்துகிறார்கள்.
vi) சிறுநீர் பரிசோதனையின் மூலம் அதன் அளவு, அல்புமின் புரதம், சர்க்கரை, சிறுநீரகத்தில் ஏதேனும் படிந்திருக்கிறதா என்பதையும் நோய்த் தொற்றையும் கண்டுபிடிப்பார்கள். புற்று, காசம் போன்ற நோய்களையும் சிகிச்சை நடந்து வருவதன் முன்னேற்றத்தையும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு உடல் ஏற்றுக் கொள்ளாததையும் சிறுநீர் பரிசோதனையின் மூலமே கண்டுபிடிப்பார்கள்.

No comments:

Post a Comment