Monday, February 4, 2013

காவடியாட்டம்:

காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது. முருகன் கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும், பங்கேற்பர். வழிபாட்டின் கூறாகத் தோன்றிய காவடியாட்டம் பிற்காலத்தில் தொழில்முறை ஆட்டமாகவும் வளர்ச்சி பெற்றது. எனினும் வழிபாட்டுத் தொடர்பான காவடியாட்டம் அல்லது காவடியெடுத்தல் இன்னும் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. தொழில்முறைக் காவடியாட்டம் பொதுவாகக் கரகாட்டத்தின் ஒரு துணை ஆட்டமாக இடம் பெற்று வருகின்றது.
காவடி

தற்காலக் காவடியின் அமைப்பு:

காவடியாட்டத்திற்குப் பயன்படும் கருவியே காவடி எனப்படுகிறது. இது தொடக்கத்தில் சுமை சுமப்பதற்கான நீளமான ஒரு தடியையே (கோல்) குறித்தது. இதன் தொடர்ச்சியாகவே ஒரு நீளமான தடியின் இரண்டு முனைகளிலும், பால், தேன் அல்லது இளநீர் நிரப்பிய குடங்களைத் தொங்கவிட்டுக் காவடி எடுக்கும் வழக்கம் நிலவுகிறது. பூக்கள், வெட்டிவேர், பட்டுத்துணி, மயிலிறகு போன்றவற்றினால் காவடிகள் அழகூட்டப்படுகின்றன. தற்காலத்துக் காவடிகள் பல கூடிய அழகுணர்ச்சியுடன் உருவாக்கப்படுகின்றன. ஆனாலும் இதன் அடிப்படையான பகுதி ஒரு தடியே. இத் தடியின் இரு முனைகளையும் இணைக்கும் வகையில் மரத்தாலும், மெல்லிய பிரம்புகளினாலும் ஆன ஒரு வளைவான அமைப்பு இருக்கும். இதன் மேல் அழகான குஞ்சங்களுடன் கூடிய பட்டுத்துணி போர்த்தப்பட்டிருக்கும். நான்கு மூலைகளிலும் ஏராளமான மயில் இறகுகளைச் சேர்த்துக் கட்டி அழகூட்டியிருப்பர். வளைவுப் பகுதியின் உச்சியிலும் உயரமான கூம்பு வடிவான அலங்காரக் கூறு அமைந்திருக்கும். எனினும், காவடிகள் வேறுபட்ட அலங்காரங்களுடனும் அமைந்திருப்பது உண்டு. பொதுவான காவடி ஏறத்தாழ 3 அடிகள் அகலம் உள்ளதாக இருக்கும். தோளில் வைக்கும்போது இரண்டு பக்கங்களிலும் சற்றுக் கூடுதலாக இருக்கும்படி இது அமையும். இது 5 கிலோ தொடக்கம் 7 கிலோ வரை நிறை கொண்டதாக இருக்கும். ஆனால், சிறுவர்களும் காவடி எடுப்பது உண்டு ஆகையால் அவர்களுக்காக நிறை குறைவான சிறிய காவடிகளும் உருவாக்கப்படுகின்றன.

காவடி ஆட்டத்துக்கான இசை:

காவடியாட்டத்துக்கான பின்னணி இசைக் கருவிகளாக நாதசுரமும், தவிலும் விளங்குகின்றன. நாதசுரத்தில் காவடிச் சிந்து இசையை வாசிக்கக் காவடியாட்டம் ஆடுவது மரபு. தற்காலத்தில் ஆடுவதற்கு ஏற்றதாக அமையக்கூடிய சினிமாப் பாடல்களையும் நாதசுரத்தில் வாசிப்பதைக் காணமுடிகிறது.

காவடி வகைகள்:

பால் காவடி
பன்னீர்க் காவடி
மச்சக் காவடி
சர்ப்பக் காவடி
பறவைக் காவடி
தூக்குக் காவடி

No comments:

Post a Comment